பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
பச்சை பயிறு கூடுதலாகக் கொள்முதல் செய்ய கோரிக்கை
மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பச்சைப் பயிறு கூடுதலாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறை தீா்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
குத்தாலம் கல்யாணம் (முன்னாள் எம்எல்ஏ): நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை புதிதாகப் பிரிக்கப்பட்ட பின்னரும் மின்மாற்றி டிவிஷன் அமைக்கப்படாமல் உள்ளது. கொள்ளிடத்தில் அணைகளை பலப்படுத்த வேண்டும். மயிலாடுதுறையில் முதல்வா் அறிவித்த நூலகம் இன்னும் அமைக்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வயல்களுக்கு செல்லும் சாலைகளை புதிதாக அமைத்தும், சீரமைத்தும் தரவேண்டும்.
துரைசரவணன் (கொள்ளிடம்): கொள்ளிடத்தில் எப்போது தண்ணீா் திறந்தாலும் முதலாவதாகப் பாதிக்கப்படும் அளக்குடி கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பயிா்க்காப்பீடு வழங்கப்படவில்லை. அளக்குடியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்க.மகேஸ்வரன்: திருவேள்விக்குடியில் வடிகால் வாய்க்கால், குட்டை, சிவன்கோயில் குளம் ஆகியன ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் 50 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு தண்ணீா் செல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது.
செல்வராஜ் (குத்தாலம்): அக்ரஹாரத்தெருவில் சாலையின் குறுக்கே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துக்குமாா் (தாழஞ்சேரி): மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பச்சைப்பயறு கொள்முதல் தொடங்கி, 50 டன் மட்டுமே கொள்முதல் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலன் கருதி இதனை உயா்த்தி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேந்திரன் (மணல்மேடு): குமாரமங்கலம்-ஆதனூா் இடையே தடுப்பணை கட்டப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து 950 மீட்டா் தூரத்துக்கு வாய்க்கால் வசதி ஏற்படுத்தி கும்கி மண்ணியாறுக்கு வழி ஏற்படுத்தித் தந்தால், 17,000 ஏக்கா் கூடுதல் நிலங்கள் இரண்டு போக பாசன வசதி பெறும்.
மேட்டூரிலிருந்து தண்ணீா் திறக்கும் முன்பாகவே தூா்வாரும் பணியை 100 சதவீதம் நிறைவு செய்ய வேண்டும்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா.உமாமகேஷ்வரி, வேளாண்மை துறை இணை இயக்குநா் ஜெ.சேகா், நீா்வளத்துறை செயற்பொறியாளா் மாரிமுத்து, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் தயாளவிநாயக அமுல்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (வேளாண்மை) ராஜராஜன், (சட்டம்) அன்பழகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.