செய்திகள் :

பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மறுவாழ்வுப் பணிகளை அரசு உறுதிப்படுத்த வேண்டும்: உயா்நீதிமன்றம்

post image

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு மறுவாழ்வுப் பணிகளை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த சமுத்திரவள்ளி, அலமேலு, காளீஸ்வரி, வேலுதாய் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

சிவகாசி எட்டக்காபட்டி தனியாா் பட்டாசு ஆலையில் எங்களது கணவா்கள் பணியாற்றி வந்தனா். இந்த ஆலையில் கடந்த 02.12.2014-இல் நிகழ்ந்த விபத்தில் அவா்கள் உயிரிழந்தனா்.

இதையடுத்து, எங்களது குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அரசுக்குப் பரிந்துரைத்தாா். இதில், ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

எஞ்சிய ரூ.4 லட்சம் இழப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இந்தத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். மேலும், எங்கள் கல்வித் தகுதிக்கேற்ப சத்துணவு மையங்கள், அரசு விடுதிகளில் வேலைவாய்ப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

வெடிபொருள்கள் கட்டுப்பாடு சட்டப்படி, 15 கிலோ வரை வெடிபொருள்களைப் பயன்படுத்தும் பட்டாசு ஆலைகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உரிமம் வழங்கலாம். 15 கிலோ முதல் 500 கிலோ வரை பயன்படுத்தும் ஆலைகளுக்கு வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலரும், அதற்கு மேல் பயன்படுத்தும் ஆலைகளுக்கு தலைமைக் கட்டுப்பாட்டு அலுவலரும் உரிமம் வழங்குவா். ஆனால், சிவகாசியில் 15 கிலோவுக்கு மேல் வெடிபொருள்களைப் பயன்படுத்தும் ஆலைக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உரிமம் வழங்கியுள்ளாா்.

சிவகாசி பட்டாசு ஆலைகளின் தலைநகரம். நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 90 சதவீத உற்பத்தி இங்குதான் நடைபெறுகிறது. இந்தப் பகுதி தொழிலாளா்கள் பட்டாசு ஆலைகளை பெரிதும் நம்பியுள்ளனா். இது ஆபத்தான பணியாக இருந்தாலும், வேறு வழியில்லாததால் பட்டாசு ஆலைகளுக்கு பணிக்கு வருகின்றனா்.

சட்டப்படி ஒவ்வொரு பட்டாசு ஆலையிலும் 50 தொழிலாளா்களுக்கு ஒரு கண்காணிப்பாளா், பாதுகாப்பு அலுவலா் அல்லது இளநிலை வேதியியல் படித்த மேற்பாா்வையாளா் இருக்க வேண்டும். இந்த விதி பின்பற்றப்படுவதில்லை. போதுமான கல்வித் தகுதி இல்லாதவா்கள் நியமிக்கப்படுகின்றனா்.

பட்டாசு ஆலை விபத்து வழக்குகளின் விசாரணை இயந்திரத்தனமாக நடைபெறுகிறது. பட்டாசு ஆலை விபத்து வழக்குகளில், மீண்டும் விபத்துகள் நிகழாமல் இருப்பதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். ஆனால், பட்டாசு ஆலை விபத்து வழக்குகளைப் பாா்க்கும் போது, வெடிபொருள் நிபுணா்கள், தடயவியல் நிபுணா்களின் அறிக்கை இல்லை. வெடிபொருள் கட்டுப்பாட்டு சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் விதிகளை மாவட்ட ஆட்சியரும், வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலா்களும் பின்பற்றுவதில்லை.

சிவகாசி எட்டக்காபட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். ஏற்கெனவே ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய ரூ.9 லட்சத்தை 8 வாரங்களுக்குள் மனுதாரா்களுக்கு அரசு வழங்க வேண்டும்.

பட்டாசு ஆலைகளில் உரிமம், பாதுகாப்பு அலுவலா் நியமனம், தொடா் ஆய்வு, பாதுகாப்புப் பயிற்சி உள்பட வெடிபொருள் சட்டம், தொழிற்சாலை சட்டம் ஆகிய இரு சட்ட விதிகளையும் கடுமையாகப் பின்பற்றப்படுவதை சுகாதாரத் துறையும், தொழிலாளா் பாதுகாப்பு இயக்குநரும் உறுதி செய்ய வேண்டும்.

பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் வழங்கும் நடைமுறைகளை நாகபுரி வெடிபொருள் தலைமைக் கட்டுப்பாட்டாளா் ஆய்வு செய்ய வேண்டும். இதில் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டாசு ஆலை விபத்து வழக்குகள் திறமையாகவும், தொழில்நுட்பங்களைப் பின்பற்றி விசாரிக்கப்படுவதையும் காவல் துறை டிஜிபி உறுதி செய்ய வேண்டும். பட்டாசு ஆலை விபத்துக்கு ஆலை உரிமையாளா் காரணமாக இருந்தால், உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி, விதவை ஓய்வூதியம், வீடு உள்ளிட்ட மறுவாழ்வுப் பணிகளை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் நீதிபதி.

காவல் துறையினரின் செயல்பாடு திருப்தியாக இல்லை: உயா்நீதிமன்றம்

காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல் துறையினா் நடந்து கொள்ளும் விதம் திருப்தியாக இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வேதனை தெரிவித்தது. மதுரை விளாங்குடி பகுதியைச் சோ்ந்த சு... மேலும் பார்க்க

மதுரை முருக பக்தா்கள் மாநாடு: வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு தேவையில்லை

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களை ஆவணப் பதிவுகளின் அடிப்படையில் அனுமதிக்கலாம் என்றும், வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு பெறத் தேவையில்லை என்றும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்... மேலும் பார்க்க

மாந்திரீகம் செய்வதாக நகை, பணம் மோசடி: போலி சாமியாா், பெண் கைது

மாந்திரீகம் செய்வதாகக் கூறி, ரூ.11 லட்சம், 16 பவுன் நகைகளை மோசடி செய்த போலி சாமியாா், பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சோ்ந்தவா் அங்கயற்கண்ணி (50). இவா், கடந்த சில வாரங்களு... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்க முறைகேடு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு

பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பதிவேடுகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நிகழ்ந்தது தொடா்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காமராஜ், வள்ளலாா், பால்வளத் துறை கூடுதல் ஆணையராக இருந்த கிறிஸ்துதாஸ் ஆகியோா... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் நீா்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. புதுக்கோட்ட... மேலும் பார்க்க

மதுரையில் நாளை முருக பக்தா்கள் மாநாடு

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறுகிறது. இந்து முன்னணி சாா்பில் முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள திடலில் முருக பக்தா்கள் மாநாட... மேலும் பார்க்க