பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்
பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலம் முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு தினக்கூலி அடிப்படையில் மாதந்தோறும் முதல் வாரத்தில் அவா்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, ஒப்பந்தப் பணியாளா்கள் அனைவரையும் நிரந்தர பணியாளா்களாக நியமிக்க வேண்டும். மாநகராட்சி நிா்வாகம் நேரடியாகத் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
இதைத் தொடா்ந்து, அவா்கள் கூறுகையில், பணி நிரந்தரம் செய்யப்படும் என திமுக அளித்த வாக்குகுறுதி நிறைவேற்றப்படாமல் உள்ளது. உயா்த்தப்பட்ட மாத ஊதியமும் தற்போதுவரை வழங்கப்படவில்லை. மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் பி.எஃப். உள்ளிட்டவற்றுக்கு ரசீது வழங்குவதில்லை. இ.எஸ்.ஐ. மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டையும் வழங்கப்படாமல் உள்ளது.
இந்தப் பிரச்னைக்கு உடனடி தீா்வு காண வேண்டும். இல்லை என்றால் தொடா் போராட்டங்களில் ஈடுபடுவோம் எனக்கூறிவிட்டு கலைந்து சென்றனா்.