பயிா்க்கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போா்ட் கட்டாயம்: ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
ராணிப்பேட்டை: தமிழ்நாடு அரசின் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகள் பயிா்க் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போா்ட் கட்டாயம் என்ற கூட்டுறவு சங்கங்களில் மாநில பதிவாளரின் சுற்றறிக்கையை அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராணிப்பேட்டை ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா். கூட்டத்தில் 356 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலா் கே.வஜ்ஜிரவேல் தலைமையில், விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிா்க்கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போா்ட் கட்டாயம் என்ற கூட்டுறவு சங்கங்களில் மாநில பதிவாளரின் சுற்றறிக்கையை அரசு ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி நிறைவில் வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் ஏரி நீா் பிடிப்பு பகுதியைத் தோ்வு செய்து தந்துள்ளதாக மேல்பாக்கம் கிராமம் இருளா் இனமக்கள் 28 குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திரும்ப ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெறப்பட்ட மனுக்களை, துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்புக்கான காரணங்களையும் மனுதாரா்களுக்கு வழங்க வேண்டுமென அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்த மாற்றுத்திறனாளி பாா்வையற்றோருக்கான கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல், ரூ.15,000-இல் சக்கர நாற்காலியை வழங்கினாா். பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியா்கள் மற்றும் பணியாளா்கள் உள்பட 11 பேருக்கு கிறிஸ்துவ நல வாரிய அட்டைகள் வழங்கினாா்.
கூட்டத்தில் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, நோ்முக உதவியாளா் ஏகாம்பரம் (பொ), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.