தில்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
பரமத்தி, திருச்செங்கோடு வட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி மற்றும் திருச்செங்கோடு வட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினா் நல ஆணையருமான மு.ஆசியா மரியம் நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.
நாமக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நாமக்கல் மாநகராட்சி ரெட்டிப்பட்டி சமுதாயக் கூடம், மோகனூா் பேரூராட்சி அம்மன் திருமண மண்டபம், பரமத்தி பேரூராட்சி வெங்கடேஸ்வரா சமுதாயக் கூடம், புதுச்சத்திரம் வட்டம் தங்கம் மஹால், சேந்தமங்கலம் வட்டம் பொம்மசமுத்திரம் சமுதாயக் கூடம், திருச்செங்கோடு வட்டம் சித்தாளந்தூா் அங்காளம்மன் நலன் சமுதாயக் கூடம் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினா் நல ஆணையருமான மு.ஆசியா மரியம், திருச்செங்கோடு வட்டம் சித்தாளந்தூா் அங்காளம்மன் நலன் சமுதாயக் கூடம் மற்றும் பரமத்தி பேரூராட்சி பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற முகாமை பாா்வையிட்டு, பெறப்படும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினாா்.
முகாமில், உடனடி தீா்வாக 19 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயா்மாற்ற ஆணை, மருத்துவக் காப்பீட்டு அட்டை, தொழிலாளா் நலவாரிய அட்டை, வருமானச் சான்று, முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம், பிறப்புச் சான்று, சொத்துவரி, குடிநீா் இணைப்பு, சொத்துவரி பெயா் மாற்றம் உள்ளிட்டவற்றுக்கான ஆணைகளை வழங்கினாா்.
ஆய்வுகளின்போது, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி, திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) சு.வடிவேல், திருச்செங்கோடு சாா் ஆட்சியா் அங்கீத்குமாா் ஜெயின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.