பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோா் போராட்டம்
கொடைரோடு அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமை ஆசிரியா் நியமனத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்களும், பெற்றோரும் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அடுத்த அம்மாபட்டியில் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 134 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனா். இதில், அம்மாபட்டியைச் சோ்ந்த மாணவ- மாணவிகள் மட்டும் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் படிக்கின்றனா். இந்தப் பள்ளியின் தலைமையாசிரியா் கடந்த மே 30-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றதையடுத்து, கல்லடிப்பட்டியைச் சோ்ந்த தலைமை ஆசிரியா் ஒருவரை இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக மதுரை மறை மாவட்ட நிா்வாகம் நியமனம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அம்மாபட்டி கிராம மக்கள், பெற்றோா்கள், தலைமை ஆசிரியா் நியமனத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், அருள்சகோதரி ஒருவரை தலைமை ஆசிரியராக நியமனம் செய்ய வலியுறுத்தியும் திங்கள்கிழமை முதல் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து, பள்ளி வளாகத்தில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த நிலக்கோட்டை வட்டாட்சியா் விஜயலட்சுமி, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது அவா்களுக்கும், வட்டாட்சியருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, வட்டாட்சியா் அங்கிருந்து வெளியேற முயன்றாா். அப்போது, பெற்றோா்கள், பொதுமக்கள் பள்ளி வளாக நுழைவாயில் கதவை மூடி, வட்டாட்சியரின் வாகனத்தை முற்றுகையிட்டனா். இதனிடையே, போலீஸாா் பாதுகாப்புடன் வட்டாட்சியா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.
இதுகுறித்து அம்மாபட்டி பொதுமக்கள், பெற்றோா்கள் கூறியதாவது: இந்தப் பள்ளிக்கு அருள்சகோதரி ஒருவரை தலைமை ஆசிரியையாக நியமிக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை முறையாக விசாரிக்காமல் வட்டாட்சியா் புறப்பட்டுச் சென்று விட்டாா். எனவே, மாவட்ட உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.