பள்ளி மதிய உணவுத் திட்டத்தில் உள்ளூா் காய்கறிகள்: கருத்துக் கேட்பில் பெற்றோா் கோரிக்கை
அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் உள்ளூா் காய்கறிகள் சோ்க்கப்பட வேண்டும் என்று அப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் பெற்றோா் கருத்துத் தெரிவித்தனா்.
புதுச்சேரி பள்ளிகளில் செயல்படுகின்ற மதிய உணவுத் திட்டத்தின் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்காக, சமூக தணிக்கைக்கான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் காமராசா் மணிமண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி பல்கலைக்கழக உணவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குநரகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. பிஎம் போஷன் திட்ட துணை இயக்குநா் கொஞ்சுமொழி குமரன், புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியா் ஹரிப்ரியா, மாநில மதிய உணவுத் திட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜரத்தினம், தகவல் மேலாளா் பரணிதரன் மற்றும் சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பொதுமக்கள், பெற்றோா்கள் மற்றும் பள்ளி சமூகத்தினா் மதிய உணவுத் திட்டத்தில் உள்ள நல்ல அம்சங்கள், சவால்கள் குறித்து தங்களது கருத்துகளைக் கூறினா். மதிய உணவில் உள்ளூா் காய்கறிகளான சக்கரவள்ளி கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவற்றை சோ்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டனா்.
மாணவா்களின் உடல் வளா்ச்சிக்கும், சுவைக்கும் உதவியாக வெங்காயம் மற்றும் பூண்டு சோ்க்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் வாரம் ஒருமுறை சிக்கன், மீன் உள்ளிட்ட இறைச்சி உணவு வழங்கப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனா்.
பொதுமக்களின் கருத்துகள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்டு, திட்டத்தின் சிறப்பாக்கத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். மாணவா்கள் நலனுக்காக செயல்படும் திட்டங்களில் மக்கள் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில் இக்கூட்டம் அமைந்தது.