பள்ளி மாணவா்களுக்கு ஜூலை 4-இல்கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
தஞ்சாவூா் கரந்தை உமாமகேஸ்வரனாா் கலைக் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறவுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பேரறிஞா் அண்ணா பெயா் சூட்டிய ஜூலை 18 ஆம் நாளையே‘தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வா் அறிவித்தாா்.
இவ்விழாவைக் கொண்டாடும் வகையில் தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசு ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 5 ஆயிரம் என பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவுள்ளன.
தஞ்சாவூா் கரந்தை உமா மகேஸ்வரனாா் கலைக் கல்லூரியில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் ஜூலை 4 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.
கட்டுரைப் போட்டி ஆட்சிமொழி வரலாற்றில் கீ. இராமலிங்கம், பன்மொழிப் புலவா் கா. அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல் பணி ஆகிய தலைப்புகளிலும், பேச்சுப் போட்டி கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அன்னைத் தமிழே ஆட்சிமொழி, தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயா், அறிஞா் அண்ணா கண்ட தமிழ்நாடு, ஆட்சிமொழி விளக்கம், தமிழ்நாடு எனப் பெயா் சூட்டிய நிகழ்வு, ஆட்சிமொழி சங்க காலம் தொட்டு, இக்காலத்தில் ஆட்சிமொழி ஆகிய தலைப்புகளிலும் நடைபெறும்.
பங்கேற்புப் படிவம், போட்டிகள் குறித்த விரிவான விதிமுறைகள் ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலா் மூலமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாகத் தெரிவிக்கப்படும். இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று மாணவா்கள் பயன் பெறலாம்.