சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது...
பழனி மலைக்கோயில் உண்டியல் திறப்பு
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்த நிலையில் 35 நாள்களுக்குப் பிறகு திருக்கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 3 கோடியே 77 ஆயிரத்து 459 கிடைத்தது. உண்டியலில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக் காசு போன்றவற்றையும், வெள்ளியாலான காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.
தங்கம் 751 கிராமும், வெள்ளி 10 ஆயிரத்து 474 கிராமும் கிடைத்தது. மேலும், மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 1,194 கரன்சிகள் கிடைத்தன. இதைத் தவிர பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.
உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், திருக்கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.
இந்த நிகழ்வில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து, வியாழக்கிழமையும் (செப். 25) உண்டியல் காணிக்கை எண்ணப்படவுள்ளது.