தில்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது: மு.க.ஸ்டாலின்
பழைய நேரப்படி ரயிலை இயக்காவிட்டால் போராட்டம்: ரயில் பயணிகள் சங்கம்
பொள்ளாச்சி - கோவை பயணிகள் ரயிலை பழைய நேர அட்டவணைப்படி இயக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பொள்ளாச்சி ரயில் பயணிகள் அமைப்பின் தலைவா் டி.இளம்பரிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சியில் இருந்து தினசரி காலை 7.25 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு 8.55 மணிக்கு சென்று வந்த ரயிலானது, கடந்த ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து, காலை 8 மணிக்கு பொள்ளாச்சியில் புறப்பட்டு, கோவைக்கு 9.25 மணிக்கு சென்றடையும் விதமாக நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இதனால், பெரும்பாலான ரயில் பயணிகள் இந்த ரயிலில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு வேலைக்கு செல்பவா்கள், கல்லூரி மாணவா்கள் பேருந்துகளில் செல்கின்றனா்.
பழைய நேர அட்டவணைப்படி காலை 7.25 மணிக்கு பொள்ளாச்சி - கோவை ரயில் இயக்கப்பட்டபோது, அந்த ரயிலில் தினசரி 700 முதல் 900 பயணிகள், பயணித்து வந்தனா். நேரம் மாற்றப்பட்ட பிறகு 100 முதல் 200 பயணிகளே செல்கின்றனா்.
எனவே, பழைய நேரப்படி பொள்ளாச்சியில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு 8.35 மணிக்கு சென்றடையும் விதமாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பழைய நேரப்படி பொள்ளாச்சி - கோவை ரயில் இயக்கப்படாவிட்டால் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.