பஹல்காம் தாக்குதல்: தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவிப்பு!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நடத்திய லஷ்கர்-ஏ-தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் குழுவை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் அமெரிக்கா இணைத்தது.
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரான பஹல்காம் அருகேயுள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏப்ரல் 22-ஆம் தேதி துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 25 பேரும், உள்ளூா் தொழிலாளி ஒருவரும் கொல்லப்பட்டனா்.
இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பயங்கரவாதக் குழுப் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது அந்த குழுவின் தலைவர் ஷேக் சஜ்ஜாத் குல் என்பதை என்ஐஏ அடையாளம் கண்டுள்ளது.
இந்த நிலையில், தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் குழுவை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இணைப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாவது:
“தேசிய பாதுகாப்பு நலனைப் பாதுகாக்கவும், பயங்கரவாதத்துக்கு எதிராகவும், பஹல்காம் தாக்குதலுக்கு நீதியை நிலைநாட்டுவதிலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை நிரூபிக்கிறது.
2008 ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பாவின் தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். இந்திய படைகளுக்கு எதிரான பல தாக்குதலுக்கு ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்று இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்காவுக்கான இந்திய தூதரகம் கூறியிருப்பதாவது:
”இந்த நடவடிக்கை இந்தியா - அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்புக்கு மற்றொரு வலுவான நிரூபணம். ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்டை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகவும் உலகளாவிய பயங்கரவாத அமைப்பாகவும் பட்டியலிட்டதற்கு அமெரிக்க வெளியுறவுத் துறையைப் பாராட்டுகிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி அழித்தது.
இந்த தாக்குதல் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கமளிக்க 7 எம்பிக்கள் குழுக்களை மத்திய அரசு அமைத்தது. அவர்கள் அமெரிக்கா உள்பட 33 நாடுகளுக்குச் சென்று அந்த நாட்டு தலைவர்களை சந்தித்து ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கம் அளித்திருந்தனர்.