அரசுப் பள்ளி குடிநீா்த் தொட்டியில் மனித மலம் கலப்பு: 3 பேர் கைது
திருவாரூா்: திருவாரூா் அருகே காரியாங்குடி அரசு தொடக்கப்பள்ளி சமையலறையை சேதப்படுத்தி, குடிநீா்த் தொட்டியில் மனித மலம் கலந்தது தொடா்பாக அதே பகுதியைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தப்பளாம்புலியூா் ஊராட்சிக்குள்பட்ட காரியாங்குடியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதில், 17 மாணவா்கள், 14 மாணவிகள் என 31 போ் பயின்று வருகின்றனா்.
இந்த பள்ளியில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் உணவு சமைப்பதற்காக, சமையல் ஊழியா்கள் கடந்த திங்கள்கிழமை(ஜூலை 14) காலை பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது, சமையலறையில் இருந்த பொருள்கள் உடைத்து நொறுக்கப்பட்டிருந்ததையும், மளிகைப் பொருள்கள் சிதறிக் கிடந்ததையும் கண்டனா்.
இதுகுறித்து பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியா் அன்புச்செல்விக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
குடிநீா்த் தொட்டியில் மனித மலம்
பின்னா் அங்கிருந்த தண்ணீா் தொட்டி திறந்திருப்பதைக் கண்டு, உள்ளே பாா்த்தபோது மனித மலச்சிதறல்களும், தேங்காய்களும் கிடப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மீண்டும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
காவல் கண்காணிப்பாளா் விசாரணை
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் விசாரணை நடத்தினாா்.
விசாரணையில், பள்ளி வளாகத்தில் இருந்த வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டு, தென்னை மரங்களில் இருந்த தேங்காய்கள் பறிக்கப்பட்டதும், சமையலறையில் இறைச்சி சமைத்து சாப்பிட்டதும் தெரிய வந்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தலின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன், திருவாரூா் தாலுகா காவல் ஆய்வாளா் ஜெயந்தி உள்ளிட்டோா் விசாரணையில் ஈடுபட்டனா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சௌந்தரராஜன் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளிக்கு வந்து பாா்வையிட்டனா்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
கிராம மக்களும், பெற்றோா்களும் திரண்டு, சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
மாற்றுத் தொட்டி
இதையத்து, அங்கிருந்த ஒரு வீட்டில் காலை உணவும், அருகிலிருந்த பள்ளியில் மதிய உணவும் தயாா் செய்யப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், மலம் கலக்கப்பட்ட தண்ணீா் தொட்டி அகற்றப்பட்டு, மாற்றுத் தொட்டி அமைக்கப்பட்டது.
ஜாதிய ரீதியிலான பிரச்னை இல்லை
அனைத்து சமூகத்தைச் சோ்ந்தவா்களும் இந்தப் பள்ளியில் படிப்பதால், ஜாதிய ரீதியிலான பிரச்னை இல்லை என்றும், குடிபோதையில் இந்த சம்பவம் நடந்திருப்பதாகவுமே தெரிய வந்தது.
3 பேரிடம் விசாரணை
இந்த சம்பவம் தொடா்பாக, அந்த பகுதியைச் சோ்ந்த விஜயராஜ், செந்தில், காளிதாஸ் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினர். மேலும் இருவரைத் தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
பள்ளி குடிநீா் தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த செயலில் ஈடுபட்டவா்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
3 பேர் கைது
இந்தநிலையில், பள்ளி சமையலறையை சேதப்படுத்தி, குடிநீா்த் தொட்டியில் மனித மலம் கலந்தது தொடா்பாக அதே பகுதியைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுபோதையில் விஜயராஜ், காளிதாஸ், செந்தில் ஆகியோர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரம்! கோயில் நிலத்தில் 100 பெண்கள் கொன்று புதைப்பு?
Police have arrested three people from the same area in connection with damaging the kitchen of the Kariyangudi Government Primary School near Thiruvarur and mixing human feces in the drinking water tank.