பாகிஸ்தான் அணி வீழ்ச்சியை நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பிடம் வேண்டுகோள்!
பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்பிடம் பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுகோள் விடுக்கப்படுமென பாகிஸ்தானின் மூத்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியில் கூட வெல்லாமல் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
கடைசி போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்நாட்டு ரசிகர்கள், முன்னாள் வீரர்களிடம் இருந்து பிசிபி குறித்து கடுமையான விமர்சனங்கள் வந்துகொண்டுள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தானின் மூத்த அரசு அதிகாரி ராணா சனாவுல்லா கூறியதாவது:
மோசமான கிரிக்கெட் வாரியம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனிப்பட்ட நிறுவனம். அவர்கள் நினைத்ததை செய்யக்கூடியவர்கள். பாகிஸ்தான் அணி குறித்து அமைச்சரவை, மக்களவையில் பேச பிரதமரிடம் வேண்டுகோள் வைப்பேன்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சமீப பத்தாண்டுகளாக பல உயர்வு, தாழ்வு ஏற்பட்டு கிரிக்கெட் வாரியத்தை பலமுறை மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நடைபெறும் செலவு குறித்து மக்கள் பார்வைக்கு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும்.
ஆலோசகர்கள் ரூ. 50 லட்சம் வாங்கிக்கொண்டு அவர்களது கடைமையை தெரியாததுபோல இருக்கிறார்கள். வேலை செய்யாமலே பணத்தை மட்டும் வாங்கிக் கொள்கிறார்கள்.
இது பாகிஸ்தானா ஐரோப்பிய நாடா?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சலுகைகள், சிறப்புகளைப் பார்த்தால் இது பாகிஸ்தானா அல்லது வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடா என நீங்களே அதிசயிப்பீர்கள்.
இந்த விஷயங்களை பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பின் கவனத்துக்கு கொண்டுசெல்வோம். பிசிபியில் அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப முடிவுகளை எடுப்பதால்தான் பாகிஸ்தான் அணியின் நிலைமை இப்படி இருக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள நிலையான ஒரு நல்ல கிரிக்கெட் வாரியம் வேண்டும். அங்கு இன்னும் வளர்ச்சியடைய வேண்டிய தேவை இருக்கிறது என்றார்.