பாகிஸ்தான் அதிபர் மருத்துவமனையில் அனுமதி!
பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
69 வயதாகும் அதிபர், காய்ச்சல், தொற்று காரணமாக கராச்சியிலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள நவாப்ஷாவிலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
அதிபர் ஜர்தாரி பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கு உள்படுத்தப்பட்டார், மேலும் மருத்துவர்கள் அவரது நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்களன்று ரம்ஜான் தொழுகை நடத்துவதற்காக அவர் நவாப்ஷாவுக்குச் சென்றிருந்தார், அதற்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை தனது கட்சித் தலைவர்களுடன் சந்திப்பை நடத்தியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தொலைபேசியில் அழைத்து அதிபர் ஜர்தாரியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.