மாநில ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: மாநில ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், ஆளுநர் என்பவர், மாநில அரசுடன் இணக்கத்துடன் செயல்பட வேண்டும், முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்று காட்டமாகவே தெரிவித்துள்ளது.
மேலும், ஆளுநர்களுக்கான அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவு 200-இன் கீழ் முழுமையான தன்னிச்சை அதிகாரம் என்பது அனுமதிக்கப்படவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதாவது, மசோதா மீதான ஒப்புதலை நிறுத்திவைப்பதாக ஆளுநர் அறிவிக்க எந்த வாய்ப்பும் சட்டத்தில் இல்லை. ஆனால், இந்த அதிகாரத்தை வீட்டோ அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது. ஆனால், ஒரு மாநில ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதாவது, ஒரு மசோதா ஆளுநருக்குக் கிடைக்கப்பெற்றதும், அவர் முன்பு மூன்று வாய்ப்புகள்தான் இருக்கும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது.
ஒருவேளை, மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதற்காக கிடப்பில் வைத்திருந்தால், அது பற்றி 3 மாதத்துக்குள் தெரிவித்திருக்க வேண்டும்.
பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியாது.
எனவே, ஆளுநர் திருப்பி அனுப்பி மாநில பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வாய்ப்பே ஆளுநருக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாநில அரசின் ஆலோசனை படி செயல்பட வேண்டும் என்றும், ஆளுநர் என்பவர் முட்டுக்கட்டை விதிப்பவராக இருக்கக் கூடாது என்றும் பஞ்சாப் ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பை கூறியுள்ளது என்றும் கூறியிருக்கிறது.
ஒரு மாநிலத்தின் அமைச்சரவை அளிக்கும் ஆலோசனைபடியே ஆளுநர் செயலாற்ற வேண்டும். ஆளுநருக்கு என தனி விருப்புரிமை எதுவும் இருக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.