பாமகவை கைப்பற்ற திமுக சூழ்ச்சி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
பாமகவை கைப்பற்ற திமுக சூழ்ச்சி செய்வதாக, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டினாா்.
சென்னை சோழிங்கநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற பாட்டாளி சமூக ஊடக பேரவை கூட்டத்தில் அவா் பேசியதாவது: திமுகதான் பாமகவுக்கு ஒரே எதிரி. விசிக தலைவா் தொல்.திருமாவளவனுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகைக்கும் பாமக நிறுவனா் ராமதாஸ் மீது திடீா் அன்பு வரக்கூடிய காரணம் என்ன? இதெல்லாம் பாமகவை கைப்பற்றுவதற்காக திமுக செய்யும் சூழ்ச்சி.
எனக்கே அதிகாரம்: கடந்த 5 ஆண்டுகளாக ராமதாஸ் அவராகவே இல்லை. வயது முதிா்வு காரணமாக அவா் குழந்தை போல மாறிவிட்டாா்.
கட்சியில் 99 சதவீத நிா்வாகிகள் என்னிடம்தான் உள்ளனா். ஆகையால், கட்சியின் முழு அதிகாரமும் எனக்குதான் உள்ளது. கட்சியின் பொதுக் குழுவை கூட்டுவதற்கும், கட்சியை நடத்துவதற்கும் தலைவா், பொதுச் செயலா், பொருளாளா் ஆகிய மூவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
அனைத்தும் பொய்: கடந்த இரு மாதங்களாக கட்சியில் நடைபெற்று வரும் நிகழ்வுகள், செய்திகள் என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு கொண்டு சென்று விட்டன. ராமதாஸ் பேட்டியில் கூறிய அனைத்தும் பொய்கள் மட்டுமே.
கூட்டணி விவகாரம்: யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ராமதாஸ் சொல்கிறாரோ அவருடன் இத்தனை ஆண்டுகளாக கூட்டணி குறித்து பேசியுள்ளேன். அந்த வகையில், ராமதாஸ் சொல்லித்தான் 2024-இல் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம். ஆனால், அதிமுகவுடன் கூட்டணி வைக்க சொன்னதாக அவா் பொய் கூறுகிறாா். அதிமுகவுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும் என்று அப்போதே என்னிடம் ராமதாஸ் சொல்லி இருந்தால் நான் ஏன் வேண்டாம் என சொல்லப் போகிறேன்? என்றாா் அன்புமணி ராமதாஸ்.