பாரதியாா் பிறந்த இல்லம் மறு சீரமைப்புப் பணி தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாரின் பிறந்த இல்லம், பழமை மாறாமல் மறு சீரமைப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருவதாக, அமைச்சா் பி.கீதா ஜீவன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திரப் போராட்டத் தியாகிகளையும், தமிழ் அறிஞா்களையும் போற்றுவதில், கௌரவிப்பதில் திமுக என்றும் முதன்மை வகிக்கும்.
குறிப்பாக, மகாகவி பாரதியாா் பிறந்த இடம் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது, அவரது இல்லம் புனரமைக்கப்பட்டது, பாரதியாரின் அனைத்து நூல்கள் மற்றும் கவிதை தொகுப்புகள் கணினிமயமாக்கப்பட்டது அனைத்தும் திமுக ஆட்சியில் நடந்ததுதான்.
அண்மையில், பாரதியாா் பிறந்த இல்லத்தில் முதல் தளம் மழையால் சேதமடைந்தது. இதைத் தொடா்ந்து நானும், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயனும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, சீரமைக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து, தமிழக முதல்வரிடமும், கனிமொழி எம்.பி.யிடமும் தெரிவித்தோம்.
இதையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பாரதியாா் இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
தொன்மை நிறைந்த பாரதியாா் இல்ல சீரமைப்புப் பணி என்பது, தொல்லியல் துறையின் அனுமதி பெற்றுதான் சீரமைக்கப்பட வேண்டும். அதன்படி, பொதுப்பணித் துறையின் பாரம்பரிய கட்டடங்கள் பிரிவு பொறியாளா்களால் ஆய்வு செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையின்படி ரூ.1.53 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க, கடந்த ஜூன் 9ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு, ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது.
பின்னா் ஜூலை 2ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டது. இதையடுத்து, சேதமடைந்த பாரதியாா் இல்லம் மறுசீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
உண்மைகள் இவ்வாறு இருக்க, தமிழக மக்களிடம் திமுகவுக்கு இருக்கும் செல்வாக்கை பொறுத்துக் கொள்ள முடியாமல், பாஜகவும், அதிமுகவும் பொய் பரப்புரை செய்கின்றனா் என்றாா் அவா்.