பாலிவுட் நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு! மரணத்தில் சந்தேகம்? -போலீஸ் விசாரணை
பிரபல நடிகை ஷேஃபாலி ஜரீவாலா(42) வெள்ளிக்கிழமை இரவு மரணமடைந்தார். மும்பையிலுள்ள தமது வீட்டில் இரவு மயங்கிக்கிடந்த ஷேஃபாலி ஜரீவாலாவை அவரது குடும்பத்தார் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து, ஷேஃபாலி ஜரீவாலா உடல் இன்று(ஜூன் 28) பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நடிகை ஷேஃபாலி ஜரீவாலா 90-காலகட்டங்களில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர். பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 13-ஆவது சீசனில் போட்டியாளராகவும் பங்கேற்றிருந்தார். பாடகர் ஹர்மீத் சிங்கை மணமுடித்துக்கொண்ட ஷேஃபாலி ஜரீவாலா அதன்பின், அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற நிலையில், நடிகர் பராக் தியாகியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்தநிலையில், ஷேஃபாலி ஜரீவாலா மாரடைப்பால்தான் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. எனினும், அதில் சந்தேகம் நிலவுகிறது.
இது குறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், ஷேஃபாலி ஜரீவாலா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தற்போது பிரேதப் பரிசோதனை முடிந்துள்ள நிலையில், அதன் விரிவான அறிக்கை கிடைத்ததும், அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.