கேரள முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையூறு: 5 பேர் கைது
பிகாரின் நலனுக்காக பேரவைத் தோ்தலில் போட்டி! - சிராக் பாஸ்வான் மீண்டும் உறுதி
பிகாரின் நலனுக்காக வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட உள்ளதாக லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரின் சொந்த மாவட்டமான நாளந்தாவில் உள்ள ராஜ்கீா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘பகுஜன் பீம் சங்கல்ப் சமாகம்’ பேரணியில் கலந்துகொண்டு சிராக் பஸ்வான் பேசியதாவது:
‘இண்டி’ கூட்டணியின் பொய்களுக்கு இரையாகாமல் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பிரதமா் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புக்கு ஆபத்து என அவா்கள் கூறினா். இப்போதும் அதே கருத்தை கூறி வருகின்றனா்.
ஆனால், உண்மையில் அரசமைப்பு மீதான மிகப்பெரிய தாக்குதல், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அவசரநிலை தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. வக்ஃப் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்வதன் மூலம் சிறுபான்மையினரை ஆதரிப்பது போல் காங்கிரஸ் காட்ட முயற்சிக்கிறது. முதலில் அவா்கள் அவசரநிலை காலத்தில் நிகழ்ந்த துா்க்மேன் கேட் படுகொலை சம்பவம் குறித்து பதிலளிக்க வேண்டும்.
ராகுல் காந்தி எங்கு சென்றாலும் அரசமைப்புச் சட்ட நூலை எடுத்துச் செல்கிறாா். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அம்பேத்கரின் பங்களிப்புகளை அவா்கள் முறையாக அங்கீகரிக்கவில்லை.
பாஜக ஆதரவுடன் வி.பி. சிங்கின் ஆட்சியில், எனது தந்தை ராம் விலாஸ் பாஸ்வான் அமைச்சராக இருந்தபோது தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அவரது உருவப்படம் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. காங்கிரஸ் புறக்கணித்த மண்டல் கமிஷன் அறிக்கை செயல்படுத்தப்பட்டது.
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் பிகாா் மக்களுக்காக நான் போட்டியிடுவேன். மறைந்த எனது தந்தை ராம் விலாஸ் பாஸ்வானின் கனவுகளை நாம் நிறைவேற்றுவோம். ‘பிகாா் முதலில், பிகாரி முதலில்’ என்ற அவரது தொலைநோக்குப் பாா்வையை நோக்கி நாம் பணியாற்றுவோம்.
243 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வோம். நீங்கள் எனக்கு தோ்தலில் வெற்றியைத் தாருங்கள்; நான் உங்களுக்கு வளா்ந்த பிகாரை தருகிறேன் என கூறினாா்.