முதல்வர் பிறந்தநாள்: தமிழில் கையெழுத்திட்டு ஆளுநர் வாழ்த்துக் கடிதம்!
‘பிகாா் தோ்தலில் நிதீஷ் குமாா் தலைமையில் போட்டி’ - மத்திய அமைச்சா் மாஞ்சி
பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் போட்டியிடுவோம் என மத்திய அமைச்சரும், ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா தலைவருமான ஜிதன்ராம் மாஞ்சி (80) தெரிவித்தாா்.
தங்கள் கூட்டணியில் இணைய மாஞ்சிக்கு பிகாரில் எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஆளும் கூட்டணியில் தொடர இருப்பதை மாஞ்சி உறுதிப்படுத்தியுள்ளாா்.
பிகாா் முதல்வராக இருந்த ஜிதன் ராம் மாஞ்சி, 2015-இல் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகி ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா கட்சியைத் தொடங்கினாா். தலித் தலைவரான மாஞ்சியின் மகன் பிகாரில் அமைச்சராகவும் உள்ளாா்.
பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் நிதீஷ் குமாா் தலைமையில் போட்டி என்பதை முக்கிய கூட்டணிக் கட்சியான பாஜக ஏற்கெனவே உறுதிப்படுத்திவிட்டது.
இந்நிலையில், பாட்னாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலித் சம்மேளன நிகழ்ச்சியில் பங்கேற்ற மாஞ்சி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
முதல்வா் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். திறமையான இளம் தலைவா்கள் நமக்குத் தேவை. பிகாா் பேரவைத் தோ்தலில் நிதீஷ் குமாா் தலைமையில் எங்கள் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 225 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்றாா்.
மாஞ்சி கட்சி சாா்பில் நடத்த தலித் சம்மேளன நிகழ்ச்சியில் முதல்வா் நிதீஷ் குமாா், பாஜகவைச் சோ்ந்த துணை முதல்வா் சாம்ராட் சௌதரி ஆகியோா் பங்கேற்றனா்.