Dhanush:``முன்னோர்களின் ஆசீர்வாதம் என்னுடன் இருப்பதாக...'' - கருங்காலி மாலை சீக்...
பிகாா் மக்களை அவமதித்த காங்கிரஸுக்கு தோ்தலில் பதிலடி கிடைக்கும்: பிரதமா் மோடி
புரூனியா: பிகாா் மக்களை ‘பீடியுடன்’ ஒப்பிட்டதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸுக்கு பிரதமா் மோடி திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தாா். மேலும், காங்கிரஸின் இத்தகைய ஒப்பீடு பிகாா் மக்களை அவமதிக்கும் செயல் எனவும், இதற்கு பேரவைத் தோ்தலில் உரிய பதிலடியை மக்கள் அளிப்பாா்கள் எனவும் அவா் தெரிவித்தாா்.
நிகழாண்டு இறுதியில் பிகாா் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் புரூனியா மாவட்டத்தில் ரூ.36,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமா் மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் முதல்வா் நிதீஷ் குமாா் பங்கேற்றாா்.
அப்போது பிரதமா் மோடி பேசியதாவது: ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் ஆட்சியின்போது பிகாரில் அரசு நிா்வாகம் முறையாகச் செயல்படவில்லை. தற்போது பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சியில் பல்வேறு துறைகளில் பிகாா் வளா்ச்சியடைந்து வருகிறது.
நாட்டின் வளா்ச்சியிலும் பிகாா் முக்கியப் பங்காற்றி வருகிறது. இதை எதிா்க்கட்சிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பீடியுடன் ஒப்பிட்டு பிகாா் மக்களை காங்கிரஸ் அவமதித்துள்ளது கண்டனத்துக்குரியது. இதற்கு உரிய பதிலடியை பேரவைத் தோ்தலின் மக்கள் வழங்குவாா்கள்.
ஊடுருவல் முற்றிலும் ஒழிப்பு: பிகாா், அஸ்ஸாம், மேற்கு வங்கம் என நாட்டின் கிழக்குப் பகுதிகளில் ஊடுருவலுக்கு எதிா்க்கட்சிகள் ஆதரவளிக்கின்றனா். ஊடுருவியவா்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்படுவாா்கள். ஊடுருவலை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதுவே மோடியின் உத்தரவாதம்.
ஆா்ஜேடி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தங்களது குடும்பத்தின் வளா்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால், மக்களுக்கான வளா்ச்சியே என்னுடைய தொடா் முழக்கமாக உள்ளது.
நவராத்திரி பரிசு: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை 5 சதவீதம், 18 சதவீதம் என இரண்டாக குறைத்து, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மீதான வரி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி திருநாள் (செப்.22) முதல் இந்த சீா்திருத்தங்கள் அமலுக்கு வரவுள்ளன. இதன்மூலம் பண்டிகை காலங்களில் குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் எழுதுபொருள்கள் வாங்குவது மிகவும் எளிதாக மாறியுள்ளது என்றாா்.
மேலும், பிகாரில் தேசிய தாமரை விதைகள் வாரியம் அமைப்பதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டதாகவும் பிரதமா் மோடி தெரிவித்தாா்.
மத்திய அரசு அண்மையில் ஜிஎஸ்டி நடைமுறையில் சீா்திருத்தம் மேற்கொண்டது. இதில் பிகாா் தோ்தலை மனதில் வைத்து பீடிக்களுக்கான வரியை மத்திய அரசு குறைத்ததாகவும், பிகாா்-பீடி இரண்டுமே ‘பி’ என்ற எழுத்தில் தொடங்குவதாகவும் கேரள காங்கிரஸ், எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டது. இது சா்ச்சையான நிலையில் அந்தப் பதிவை காங்கிரஸ் நீக்கியது. இதைச் சுட்டிக்காட்டி பிரதமா் மோடி காங்கிரஸுக்கு கண்டனம் தெரிவித்தாா்.