இஸ்ரேலுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைத் தீவிரம்: ஹமாஸ் அறிவிப்பு!
பிறகு ஏன் கலாய்க்க மாட்டார்கள் ‘விளம்பர மாடல் அரசு’ என்று?
அனைவருக்கும் பசுமை வணக்கம்!
மாம்பழங்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என்று மாம்பழங்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்; கரும்புக்கான நிலுவைத் தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்; குடமுருட்டி வாய்க்கால் தூர்வாரப்படவில்லை. ஆனால், கல்லணையில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளனர் என்று விவசாயிகள் போர்க்கொடி...’
- இப்படி விவசாயிகள் சார்ந்த இன்னும் பல ‘போர்க்கள’ச் செய்திகள் படபடக்கின்றன, தமிழ்நாடு முழுக்க.
‘இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மாம்பழ விளைச்சல் நன்றாகவே உள்ளது. ஆனால், உரிய விலைதான் கிடைக்கவில்லை. விவசாயிகளின் தோட்டத்திலிருந்து கிலோ மூன்று ரூபாய்க்கும், நான்கு ரூபாய்க்கும்கூட வாங்குவதற்கு ஆள் இல்லை. மாம்பழக்கூழ் உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் கூட்டணி போட்டுக்கொண்டு கொள்ளையடிக்கிறார்கள்’ என்று தமிழ்நாட்டு அரசைச் சாடித் தீர்க்கும் விவசாயிகள், ஆந்திர மாநில அரசுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்கள்.
ஆம்... ஆந்திராவில் திறம்பட மாம்பழ விற்பனையைக் கையாள்கிறார்கள். அதாவது, ஒரு டன் மாம்பழத்துக்கு 4,000 ரூபாய் அரசு மானியம் வழங்கியுள்ளது. அத்துடன், மாம்பழக்கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள் டன்னுக்கு குறைந்தபட்சம் 8,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் விலை நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், டன்னுக்கு 12,000 ரூபாய் வரை உறுதியாகக் கிடைக்கிறது. ஆனால், இங்கே நியாயமான விலையை உறுதிப்படுத்தத் தவறிவிட்டது தமிழ்நாடு அரசு.
இப்படித்தான், திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகளின் பெயரால் வாங்கப்பட்ட கடன் தொகை பல்லாயிரம் கோடிகள் நிலுவையில் இருக்க, விவசாயிகளின் சொத்துகளை ஐப்தி செய்யப்போவதாக மிரட்டுகின்றன, ஆலைக்குக் கடன் கொடுத்த வங்கிகள். விவசாயிகளுக்குத் தெரியாமலேயே அவர்களை வங்கிகளிடம் அடகு வைத்த ஆலை நிர்வாகமோ, அதை வேறொரு நிறுவனத்துக்குக் கைமாற்றிவிட்டு, தந்திரமாகத் தப்பித்துக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறது!
ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுவது ஆண்டுதோறும் வழக்கம். அதற்கேற்ப முன்கூட்டியே ஆறுகள், கால்வாய்கள், கிளை வாய்க்கால்களைத் தூர்வாருவதும் வழக்கம். ஆனால், அதையெல்லாம் உறுதிப்படுத்திக்கொள்ளாமலேயே மேட்டூரிலும் கல்லணையிலும் பூ தூவி தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், கல்லணையிலிருந்து பிரியும் குடமுருட்டி வாய்க்காலில் மறுநாளில்தான் தூர்வாரும் பணியையே தொடங்கியிருக்கிறார்கள். இதனால், 1.5 லட்சம் ஏக்கர் நிலங்களில் இப்போதைக்கு விவசாயம் செய்ய முடியாத நிலை.
‘நாடு போற்றும் நான்காண்டு சாதனை’ என்று விளம்பரம் செய்ய கோடிக் கோடியாகச் செலவிடுகிறது அரசு. மேற்கண்ட விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு கண்டிருந்தால், செலவே இல்லாமல் அரசுக்கு விளம்பரம் செய்திருப்பார்களே விவசாயிகள்.
பிறகு ஏன் ‘விளம்பர மாடல் அரசு’ என்று எதிர்க்கட்சிகள் கலாய்க்க மாட்டார்கள்?
- ஆசிரியர்