அதிமுக திட்டங்களை காப்பி - பேஸ்ட் செய்யும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி
புதுச்சேரி: "தனிநபர் வருமானம் ரூ. 3,02,680 லட்சமாக உயர்வு" - முதல்வர் ரங்கசாமி சுதந்திர தின உரை
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாண்டிச்சேரி கடற்கரைச் சாலையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் முதல்வர் ரங்கசாமி.
தொடர்ந்து பேசிய அவர், ``நாம் இப்போது உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் குடிமகனாக இருப்பதைப் பெருமையாகக் கருதுகிறோம்.
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மிகப்பெரிய பொருளாதார நாடாக நாம் உயர்ந்திருப்பது குறித்தும், நமது வளமான கலாசார பாரம்பர்ய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மரபுகள் குறித்தும் பெருமிதம் கொள்கிறோம்.
இன்று நமது பாரத தேசம் உலக அரங்கில் செல்வாக்கு மிக்க உயர்ந்த இடத்தை நோக்கி முன்னேறி இருக்கிறது. அதைச் சாத்தியமாக்கத் தொலைநோக்கு பார்வையுடன் செயலாற்றிய நமது தலைவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். நமது மாபெரும் தேசத்தின் ஒரு பகுதியான புதுச்சேரி மாநிலம், சமூக பொருளாதார வளர்ச்சிக்கு முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது.

தனிநபர் வருமானத்தை ரூ.3,02,680 லட்சமாக உயர்த்தி இருக்கிறோம்.
2020-21-ல் -2.21% விழுக்காடாக இருந்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை, 8.81% விழுக்காடாக உயர்த்திக் காட்டியிருக்கிறோம். 2020-21-ல் ரூ.8,418.96 கோடியாக இருந்த மாநிலத்தின் வருவாய் ஆதாரங்களை, நான்கு ஆண்டுகளில் ரூ.12,342,51 கோடியாக உயர்த்தி 46.60% விழுக்காடாக வளர்ச்சி அடையச் செய்திருக்கிறோம்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வியில் அதிக வாய்ப்புகளை வழங்கும் வகையில், நீட் மற்றும் நீட் அல்லாத படிப்புகளில் 10% சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கிறோம்.
2021-22-ம் ஆண்டு பெய்த வடகிழக்குப் பருவமழை மற்றும், 2023-24-ம் ஆண்டில் காரைக்காலில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண உதவியாக 16,355 விவசாயிகளுக்கு ரூ.12 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.
அதேபோல கடந்த 2024-ம் ஆண்டு பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த 12,955 விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.30,000 வீதம் உடனடி நிவாரணமாக வழங்கப்பட்டது.
இப்படி எனது அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளின் விளைவாக 2020-21-ம் ஆண்டில் 26,759 ஹெக்டேராக இருந்த பயிர் சாகுபடி பரப்பளவு, தற்போது 30,416 ஹெக்டேராக உயர்ந்திருக்கிறது. முதலமைச்சரின் அரவணைப்பு திட்டத்தின் கீழ் புதிதாகப் பிறந்த 5,884 பெண் குழந்தைகளுக்குத் தலா ரூ.50,000 வைப்புத் தொகையாகச் செலுத்தப்பட்டிருக்கிறது.
அதற்காக இதுவரை ரூ. 29.42 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. அரசின் மாதாந்திர நிதியுதவி வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் 70,000 குடும்பத் தலைவிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கப்பட்டு வருகிறது.
விரைவில் அனைத்து குடும்பங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். மாநில அரசின் நிதியிலிருந்து ரூ.4.13 கோடி மதிப்பில் 19 புதிய அங்கன்வாடி மையக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் நிதி உதவியுடன் 135 அங்கன்வாடி மையங்களைத் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.12,000-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்களுக்கும் குடிநீர் திட்டம், சாலை வசதிகள், கழிவு நீர் பாசன பாதாளச் சாக்கடைத் திட்டம், நெரிசலைச் சமாளிக்கும் கட்டமைப்பு மற்றும் உப்பு நீக்கும் ஆலை அமைத்தல் போன்றவை வங்கியின் மூலம் ரூ.4,750 கோடி கடன் பெற்று அடுத்த 5 ஆண்டுகளில் முடிக்கும் திட்டத்திற்கு அனுமதி கிடைத்திருக்கிறது.
50 எம்.எல்.டி கடல் நீரைக் குடிநீராக மாற்றும் திட்டம் ரூ.500 கோடியில் தொடங்கப்பட இருக்கிறது.
அதிக உப்புத் தன்மையைக் குறைத்து குடிநீர் வழங்கும் பொருட்டு ஏழு இடங்களில் ஒரு எம்.எல்.டி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியின் மூலம் குடிநீர் வழங்க நபார்டு வங்கியிலிருந்து ரூ.31 கோடிக்குக் கடன் பெறப்பட்டிருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.