பேராவூரணி அருகே உரிமமின்றி செயல்பட்டு வந்த குடிநீா் ஆலைக்கு ‘சீல்’: 3 ஆயிரம் தரமற்ற குடிநீா் பறிமுதல்
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் இன்றி செயல்பட்டுவந்த குடிநீா் ஆலைக்கு வியாழக்கிழமை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். மேலும், தரமின்றி தயாரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டா் குடிநீரைப் பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவின்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ரஹிமுனிசா, வேல்முருகன், சந்திரமோகன், பாலமுருகன், மதன்குமாா், சுப்ரமணி மற்றும் ரெங்கராஜ் ஆகியோா் கொண்ட குழுவினா் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காட்டில் குடிநீா் தயாரிக்கும் நிறுவனத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது குடிநீா் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் காலாவதியாகி இருந்ததுடன், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைக் கடைபிடிக்காமல் குடிநீா் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து முறையற்ற வகையில் சுத்திகரிக்கப்பட்டு விற்பனைக்காக வைத்திருந்த 3,000 லிட்டா் அடைக்கப்பட்ட குடிநீா் பாட்டில்களைப் பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத் துறையினா் அந்நிறுவனத்தை மூடி ‘சீல்’ வைத்தனா்.