45 கிலோ தூய தங்கம் சேர்த்துக் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில்!
பொள்ளாச்சி: காதலியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் - ஆத்திரத்தில் சரமாரியாக குத்தி கொன்ற காதலன்
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பொன்மலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். முதல் பெண் (வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கண்ணன் குடும்பத்தினர் வடுகபாளையம் முத்து நகர் பகுதியில் குடியிருந்தபோது, ராஜன் என்பவரின் குடும்பத்தினர் அருகில் வசித்து வந்துள்ளனர்.

ராஜனுக்கு பிரவீன் (வயது 23) என்ற மகன் உள்ளார். பிரவீன் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். பிரவீனும், மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்தத் தகவல் இரண்டு குடும்பத்தினருக்கும் தெரிந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். சிறிது காலத்தில் ராஜன் குடும்பத்தினர் உடுமலை சாலைக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
ஆனாலும் பிரவீன் – மாணவி காதல் தொடர்ந்துள்ளது. மாணவி தன் கல்லூரி நண்பர்கள், உறவினர்களுடன் செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவு செய்து வந்துள்ளார். இது பிரவீனுக்கு பிடிக்கவில்லை. ஆண்களுடன் புகைப்படம் எடுத்து ஸ்டேட்டஸ் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று மாணவியி டம் சண்டையிட்டுள்ளார். இதில் மாணவிக்கு உடன்பாடில்லை என்பதால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் பிரவீன் மாணவியின் பெற்றோரிடம் சென்று புகார் சொல்லியுள்ளார். தங்கள் மகளுக்கு பிரவீன் தொடர்ந்து மன ரீதியாக துன்புறுத்தல் கொடுப்பதால், ‘இனி எங்கள் மகளிடம் பேசக்கூடாது.’ என்று அவர்கள் பிரவீனிடம் கூறியுள்ளனர். இதையடுத்து பிரவீன் – மாணவி காதல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முறிந்துள்ளது. ஆனால் தன்னிடம் பேசுமாறு பிரவீன், மாணவியை தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாணவி வாட்ஸ்அப்பில் வைத்த ஸ்டேட்டஸ் பிரவீனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் நேரடியாக மாணவியின் வீட்டுக்கே சென்றுள்ளார். அப்போது வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார். பிரவீன் கோபத்தில் பேனா, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் மாணவியை சரமாரியாக குத்திவிட்டு தப்பியுள்ளார். நண்பகல் 12.30 மணியளவில் கண்ணன் வீடு திரும்பியபோது, மகள் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில் இருந்தவர்களின் உதவியோடு மாணவியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். சிறிது நேரத்திலேயே பிரவீன் காவல்நிலையத்தில் சரண்டராகி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். பொள்ளாச்சி காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.