போக்குவரத்துக்கு இடையூறு; ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை மறியல்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் தற்காலிக வாரச் சந்தையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தரைக்கடைகளை அகற்றக்கோரி டாக்டா் அம்பேத்கா் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஜெயங்கொண்டத்தில், வாரச்சந்தைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதையொட்டி, அங்கு இயங்கி வந்த சந்தை, பழைய மீன் சந்தையில் செயல்பட்டு வருகிறது.
இந் நிலையில் அங்கு பழ வியாபாரிகள் சிலா், ஆட்டோ நிறுத்துமிடத்தை முற்றிலும் ஆக்கிரமித்து, ஆட்டோ செல்ல முடியாத வகையில் தரைக்கடைகளை வைத்துள்ளனா். இதனால் ஆட்டோக்களை இயக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வந்த ஓட்டுநா்கள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தரைக்கடைகளை அகற்ற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸாா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் ஆட்டோ ஓட்டுநா்கள் கலைந்துச் சென்றனா். இதையடுத்து போலீஸாா், அந்த தரைக்கடைகளை அகற்றினா். இதனால் அப்பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.