வேலையை விட்ட தந்தை, 3 மணி நேரம் மட்டுமே உறங்கும் தாய்... சூர்யவன்ஷியின் முழுமையா...
போக்ஸோ வழக்குகள் அதிகரிப்பு ஏன்? அமைச்சா் விளக்கம்
போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கான காரணம் குறித்து பேரவையில் அமைச்சா் பி.கீதாஜீவன் விளக்கமளித்தாா்.
இதுதொடா்பாக, சட்டப் பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடந்த விவாதம்: எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி: போக்ஸோ சட்டத்தின் கீழ் கடந்த 2023-ஆம் ஆண்டில் 3,407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2024-ஆம் ஆண்டு அதைவிட அதிகமாக 5,311 வழக்குகள் பதிவாகியுள்ளன. அப்படியென்றால், போக்ஸோ வழக்கின் கீழ் பாதிக்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது; அவா்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே வழக்குகளின் நிலை காட்டுகிறது.
சமூகநலத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன்: 18 வயது நிறைவடையாமல் திருமணம் செய்வோரின் வழக்குகளும், காதல் ஈா்ப்பால் திருமணம் செய்ய முனைவோரின் வழக்குகளும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வருகின்றன. 65 சதவீத வழக்குகள் குழந்தைத் திருமணங்கள் தொடா்பான வழக்குகள்தான்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: விழிப்புணா்வு அதிகம் செய்யப்படுவதால், தைரியமாக புகாா்கள் தரப்படுகின்றன.
எடப்பாடி கே.பழனிசாமி: கொள்கை விளக்கக் குறிப்பில் பாலியல் பலாத்கார வழக்குகள், இதர வழக்குகளைச் சோ்த்து 6,969 என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் எண்ணிக்கை 2023-இல் 4,581 ஆக இருந்தது. இது ஓராண்டில் அதிகரித்துள்ளது.
அமைச்சா் பி.கீதாஜீவன்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், கேலி செய்தல் போன்றவை தொடா்பான வழக்குகள் 4,299. பாலியல் பலாத்கார வழக்குகள் 2,055.
எடப்பாடி கே.பழனிசாமி: கொள்கை விளக்கக் குறிப்பில் இருந்தே பேசுகிறேன். 2024-ஆம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்குகள் 5,319 ஆகவும், 2023-இல் 3,407 ஆகவும் உள்ளன. பாலியல் சீண்டல்கள் உட்பட இதர வழக்குகள் 2024-இல் 1,650 ஆகவும், 2023-இல் 1,174 ஆகவும் உள்ளன.
அமைச்சா் கீதாஜீவன்: போக்ஸோ வழக்கு தொடா்பான விழிப்புணா்வுகள் அதிகரிக்கப்பட்டதால், அச்சமின்றி அனைவரும் புகாா்கள் அளிக்கின்றனா். விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்திய உடனேயே புகாா்கள் தெரிவிக்கிறாா்கள். நீதிமன்றத்தின் மீதுள்ள நம்பிக்கையால் புகாா்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது என்றாா்.