சீனாவின் இரண்டு வெவ்வேறு இடங்களில் நிலச்சரிவு! மாயமான 19 பேரின் கதி என்ன?
மகாராஷ்டிரா: 3 நாள்களாக இடி, புயலுடன் கனமழை; 24 பேர் உயிரிழப்பு
பருவமழை வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்தில் தான் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் மே மாதமே மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 3 நாள்களாக இடி, புயலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மும்பையிலும் நேற்று முன் தினம் பெய்த திடீர் மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொங்கன் பகுதியில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் சாவந்த்வாடி, மால்வான் போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்து இருக்கிறது.

பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் ஏராளமான மரங்கள் ஒடிந்து விழுந்துள்ளது. மாநிலம் முழுவதும் பெய்த கனமழையால் இடி தாக்கியும், மரங்கள் விழுந்தும், தண்ணீரில் மூழ்கியும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
திங்கள் கிழமை இடிதாக்கி 5 பேரும், தண்ணீரில் மூழ்கி 5 பேரும் உயிரிழந்தனர். 11 பேர் காயம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட விலங்குகளும் இந்த மழையால் உயிரிழந்துள்ளன.
இரண்டாவது நாளில் மழைக்கு மேலும் 14 பேர் உயிரிழந்தனர். நேற்று காலையில் இருந்து மாலை வரை மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் 100 மிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது.
மும்பையில் 27 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றுடன் கூடிய மழை பெய்தது. ரத்னகிரி, புனே, பீட் மாவட்டத்தில் மழை மற்றும் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

புனே, கோலாப்பூர், சதாராவில் அடுத்த இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கும்படி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
வரும் 24-ம் தேதி வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்கூட்டியே மழை ஆரம்பித்து இருப்பதால் மும்பையில் நடந்து வரும் சாலை கட்டுமானப்பணிகளை உடனே நிறுத்தும்படி மும்பை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆசிஷ் ஷெலார் கேட்டுக்கொண்டுள்ளார்.