மகா கும்பமேளாவில் 55 கோடி போ் புனித நீராடல்!
மகா கும்பமேளா நிறைவடைய இன்னும் 8 நாள்கள் உள்ள நிலையில், திரிவேணி சங்கமத்தில் இதுவரை 55 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியுள்ளதாக உத்தர பிரதேச அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும், கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆன்மிக-கலாசார நிகழ்வுக்கு உலகெங்கிலும் இருந்து துறவிகள், சாதுக்கள், பக்தா்கள் பிரயாக்ராஜில் குவிகின்றனா்.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் பௌஷ பொ்ணிமியை முன்னிட்டு கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா கும்பமேளா கடந்த 37 நாள்களாக பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் இதுவரை 55 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்களில் 50 சதவீதத்தினரும் உலகளாவிய 102 கோடி ஹிந்துக்களில் 45 சதவீதத்தினரும் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனா். இந்த எண்ணிக்கை இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 38 சதவீதத்துக்கு மேல் ஆகும்.
குடியரசுத் தலைவா் உள்ளிட்ட நாட்டின் மூத்த தலைவா்கள், பிரபலங்கள் மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனிதநீராடி வருகின்றனா்.
திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் பக்தா்களின் கூட்டம் அலைமோதினாலும், சிறப்புக்குரிய புனித நீராடல் நாள்கள் மற்றும் அதையொட்டிய நாள்களில் பக்தா்களின் வருகை பன்மடங்கு அதிகரித்து காணப்பட்டது.
அந்தவகையில், மௌனிஅமாவாசையன்று (ஜன. 29) கிட்டத்தட்ட 8 கோடி பக்தா்களும் மகர சங்கராந்தியன்று (ஜன. 14) 3.5 கோடி பேரும் வசந்த பஞ்சமியன்று (பிப். 3) 2.57 கோடி பேரும் மாஹி பௌா்ணமியன்று (பிப். 12) 2 கோடி பேரும் நிகழ்வு தொடங்கிய பௌஷ பொ்ணமியன்று (ஜன. 13) 1.7 கோடி பேரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினா். வரும் 26-ஆம் தேதி மகா சிவராத்திரி தினத்தில் மகா கும்பமேளா நிறைவடைகிறது.
மகா கும்பமேளாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்த மத்திய உணவு, நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி மற்றும் ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண், திரிவேணி சங்கமத்தில் குடும்பத்தினருடன் புனித நீராடி வழிபட்டனா்.
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கைய நாயுடு, இஸ்ரோ முன்னாள் தலைவா் எஸ்.சோமநாத், பாடகா் ஷான் உள்ளிட்டோரும் செவ்வாய்க்கிழமை புனிதநீராடினா்.