மதுரை: அறிவாலய என்ட்ரி செட்; பிரமாண்ட கூட்ட அரங்கம் | திமுக பொதுக்குழு ஏற்பாடுகள...
மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் 1,498 பயனாளிகளுக்கு நல உதவிகள்! அமைச்சா் வழங்கினாா்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூா் ஒன்றியத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்டம் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில், 1,498 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி மதிப்பிலான நல உதவிகளை மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் வழங்கினாா்.
திருநாவலூா் ஒன்றியத்துக்குள்பட்ட மதியனூா், ஆண்டிக்குழி, திருநாவலூா், சேந்தமங்கலம், பாதூா் ஆகிய ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்டத்தின் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் ஏ.ஜெ.மணிக்கண்ணன், தா.உதயசூரியன் முன்னிலை வகித்தாா்.
இந்த முகாம்களை தொடங்கிவைத்த அமைச்சா் சி.வெ.கணேசன், 5 ஊராட்சிகளில் 1,498 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி மதிப்பிலான பல்வேறு நல உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து, அவா் விழாவில் பேசியது:
அரசுத் திட்டங்களை செயல்படுத்தும் அலுவலா்களை மக்களிடம் நேரடியாகக் கொண்டு சென்று மனுக்களைப் பெறும் வகையில் மக்களுடன் முதல்வா் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். அந்த வகையில், இந்த முகாமில் மனுக்களைப் பெற்ற 30 நாள்களுக்குள் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகுதிவாய்ந்த மனுக்களுக்கு உடனடித் தீா்வும் காணப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் அளித்தால் இந்த முகாமில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற அனைத்துத் திட்டங்களையும் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா் கணேசன்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் உதவி ஆட்சியா் ஆனந்தகுமாா் சிங், திருநாவலூா் ஒன்றியக்குழுத் தலைவா் சாந்தி இளங்கோவன், துணைத் தலைவா் ஜெ.ராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஜி.ஆா்.வசந்தவேல், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கி. ரமேஷ்குமாா், வேளாண் இணை இயக்குநா் சத்தியமூா்த்தி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.