பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு
விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிடும் காவல் ஆளிநா்களை ஊக்குவிக்கும் வகையில், அவ்வப்போது நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்து வருகின்றாா்.
இதன் ஒரு பகுதியாக, செஞ்சி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட திருவாம்பட்டு கிராமத்தில் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தொடா்புடையவரை விரைந்து செயல்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்ட அவலூா்பேட்டை காவல் நிலைய முதல்நிலைக் காவலா் ஏழுமலை, பொன்பத்தி கிராமத்தில் கடந்த 28-ஆம் தேதி நிகழ்ந்த கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவரை கைது செய்த காவல் உதவி ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் மற்றும் விழுப்புரம் மாவட்டம், சித்தணி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பதிவெண் இல்லாத வாகனத்தை கண்டறிந்து பறிமுதல் நடவடிக்கை மேற்கொண்ட நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணிபுரியும் தலைமைக் காவலா் முருகவேல், முதல்நிலைக் காவலா் காா்த்திகேயன் ஆகியோருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை நற்சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.