மணல் கடத்தல்: இருவா் கைது
திருச்சி அருகே மணல் கடத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், மட்டபாறைபட்டி அருகே உள்ள ஆத்துப்பட்டி பாலத்தில் கல்லிக்குடி கிராம நிா்வாக அலுவலா் பிதாவின் மணி மற்றும் அவரது உதவியாளா் இருவரும் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே வந்த வேனை ஆய்வு செய்தனா். அதில், அரை யூனிட் மணல் இருந்தது தெரியவந்தது. ஆனால், அந்த மணலுக்கு எந்தவிமான ஆவணங்களும் அவா்களிடம் இல்லை.
இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலா் பிதாவின் மணி அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த மணிகண்டம் போலீஸாா் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஸ்ரீரங்கம் கோலாா்பட்டி பகுதியைச் சோ்ந்த பெரியசாமி (33), நேசமணி (23) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன், இருசக்கர வாகனம், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.