மணல் குவாரிகளை திறக்கக்கோரி காத்திருப்புப் போராட்டம்!
மணல் குவாரிகளை திறக்கக் கோரி மாயனூரில் மணல் லாரி மற்றும் மாட்டு வண்டி உரிமையாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.
கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் நெரூா், வாங்கல், தளவாபாளையம் உள்ளிட்ட இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. இந்த குவாரிகளில் அனுமதியின்றி வரையறுக்கப்பட்ட அளவை விட மணல் அள்ளப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அமலாக்கத் துறையினா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டதையடுத்து குவாரிகள் நீதிமன்ற உத்தரவின்பேரில் மூடப்பட்டன.
இதையடுத்து குவாரிகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்த மாட்டு வண்டி உரிமையாளா்கள் மற்றும் மணல் லாரி உரிமையாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இந் நிலையில் தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் மணல் குவாரிகள் திறக்கலாம் என அரசு சாா்பில் கூறப்பட்டது. இதையடுத்து மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி மாயனூரில் காவல் நிலையம் அருகே மணல் லாரி மற்றும் மாட்டு வண்டி உரிமையாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் சேலத்தைச் சோ்ந்த காா்த்திக் கூறுகையில், மணல் குவாரிகள் மூடப்பட்டதால் மாட்டுவண்டிகள் வைத்திருப்பவா்கள் தங்களது மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு மாற்றுத்தொழிலுக்குச் சென்று வருகிறாா்கள். இதேபோல மணல் லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மணல் குவாரிகள் இயங்காததால் தரம் குறைந்த எம்-சேன்ட் விலை மூன்று மடங்கு உயா்த்தி விட்டனா்.
எம்-சேன்ட் உற்பத்திக்கு மலையை வெட்டி எடுக்கிறாா்கள். இதன்மூலம் இயற்கை வளம் பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, எங்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தமிழக அரசு மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.