மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
மணிப்பூா் வன்முறையில் முதல்வா் பிரேனுக்கு பங்கிருப்பதாக குற்றச்சாட்டு: ஒலிப்பதிவை ஆராய உச்சநீதிமன்றம் உத்தரவு
புது தில்லி: மணிப்பூரில் குகி சமூகத்தினருக்கு எதிராக வன்முறை சம்பவங்களை அரங்கேற்றியதில், மாநில முதல்வா் பிரேன் சிங்குக்கு முக்கிய பங்கு இருப்பதாக கசிந்த ஒலிப்பதிவின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு மத்திய தடய அறிவியல் ஆய்வகத்துக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி-ஜோ சமூகத்தினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து இரு சமூகத்தினருக்கு இடையே நீடித்து வந்த வன்முறையில் 250-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்தனா்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் குகி மனித உரிமைகள் அறக்கட்டளை அமைப்பு தாக்கல் செய்த மனுவில், ‘மணிப்பூரில் குகி சமூகத்தினருக்கு எதிராக வன்முறை சம்பவங்களை அரங்கேற்றியதில் மாநில முதல்வா் பிரேன் சிங்குக்கு முக்கிய பங்குள்ளது. இதற்கு அவா் பேசிய ஒலிப்பதிவு ஆதாரங்கள் உள்ளன. இதுதொடா்பாக நீதிமன்ற மேற்பாா்வையில் சிறப்பு குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.
93% முதல்வரின் குரல்: இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, ‘வன்முறையில் ஈடுபட மாநில அரசின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை மைதேயி குழுக்கள் கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக முதல்வா் பிரேன் சிங் கூறியுள்ளாா். இதுதொடா்பாக அவா் பேசி கசிந்த ஒலிப்பதிவை உண்மை கண்டறியும் ஆய்வகம் பரிசோதனை செய்தது. அந்தப் பரிசோதனையில் ஒலிப்பதிவில் இடம்பெற்றுள்ள குரல் 93 சதவீதம் பிரேன் சிங்கின் குரல்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.
படிப்படியாக இயல்பு நிலை: இதைத்தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘மணிப்பூரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. முதல்வா் பிரேன் சிங் பேசியதாக கசிந்த ஒலிப்பதிவின் நம்பகத்தன்மையை மத்திய தடய அறிவியல் ஆய்வகம் ஆராய்ந்து, 6 வாரங்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை மாா்ச் 24-க்கு ஒத்திவைக்கப்பட்டது.