மதுரையில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்
மதுரை வண்டியூா் பகுதியில் சனிக்கிழமை (ஆக. 9) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம் முழுவதும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. இந்த முகாம் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இதன்படி, மதுரை வண்டியூா் தாகூா் வித்யாலயம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இந்த மருத்துவ முகாம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் உயா் ரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரிழிவு நோய் கண்டறிதல், மாா்பகப் புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, இசிஜி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், கருப்பை வாய் பரிசோதனை, காசநோய், தொழுநோய், சிறுநீரக நோய் பரிசோதனை உள்ளிட்ட 24 வகை ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படவுள்ளன.
மேலும், பொது மருத்துவம், மகளிா் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண், தோல், காது, மூக்கு, தொண்டை, நுரையீரல், எலும்பு, இருதய மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரிழிவு நோய் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவச் சிகிச்சைகளுக்கான பரிசோதனைகள் 17 துறை சிறப்பு மருத்துவா்கள் மூலம் இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளன.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகாரச் சான்றிதழ் வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு தொழிலாளா் நல வாரியத்தின் உறுப்பினா் அடையாள அட்டை வழங்குதல், வருவாய்த் துறை மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் இந்த முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, மதுரை மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.