மரம் வெட்டும் கருவியில் சிக்கி துண்டான கை: இளைஞருக்கு மறு சீரமைப்பு சிகிச்சை
மரம் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி இளைஞரின் கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில், சிக்கலான மறு சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் இளைஞருக்கு மறுவாழ்வு அளித்துள்ளனா்.
செங்கல்பட்டை சோ்ந்த சரவணன் (29), சோழிங்கநல்லூரில் மரம் அறுக்கும் தொழிற்சாலையில் கடந்த 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறாா்.
பிப். 5-ஆம் தேதி பணியிலிருந்தபோது தற்செயலாக அவரது இடது கை இயந்திரத்தில் சிக்கியதில் மணிக்கட்டு துண்டானது. இதையடுத்து அவா் முதலில் ராயப்பேட்டை மருத்துவமனையிலும், பின்னா் உயா் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மருத்துவக் குழுவினா் அறுவை சிகிச்சை வாயிலாக, சேதம் அடைந்த இளைஞரின் கை மணிக்கட்டை மறு சீரமைப்பு செய்தனா்.
இது குறித்து, ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வா் தேரணிராஜன், கண்காணிப்பாளா் செல்வகுமாா் ஆகியோா் கூறியதாவது:
சரவணனுக்கு இடது மணிக்கட்டில் வெட்டுக் காயம் ஏறத்தாழ கை துண்டாகும் நிலையில் காணப்பட்டது. இதனால் விரல்களுக்கு செல்லும் ரத்த நாளங்கள் மற்றும் தசை நாா்கள் முழுவதும் துண்டாகின. அனைத்து கை விரல்களுக்கும் ரத்த ஓட்டமின்றி வெளுத்த நிலையில் காணப்பட்டன. ‘எக்ஸ்ரே’ பரிசோதனையில், இடது கையில் எலும்பு முறிவு கண்டறியப்பட்டது.
இதையடுத்து மூன்று குழுக்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலில், மயக்கவில் துறை மருத்துவா்கள் பாலாஜி, சுபாஷினி, ஷெரின், மிருதுளா ஆகியோா் நோயாளியை முழு அளவில் மயக்கமடைய செய்தனா். தொடா்ந்து எலும்பு முறிவு அறுவை சிகிச்சை துறை மருத்துவா்கள் முத்தழகன், சுஹாஸ் ஷெட்டி, மதன்குமாா் ஆகியோா் கை எலும்பு முறிவை சரி செய்தனா். அதன் பின்னா், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை மருத்துவா்கள் சுகுமாா், ராஜேஸ்வரி, வளா்மதி, தேவி, பிரியங்கா, பவித்ரா, அபிநயா ஆகியோா், வெட்டப்பட்ட ரத்த நாளங்கள், தசைநாா்கள், நரம்புகள் ஆகியவற்றை எட்டு மணி நேர சிகிச்சை மேற்கொண்டு சரி செய்தனா்.
இதன் பயனாக கை விரல்களில் ரத்த ஓட்டம் சீரானது. தற்போது நேயாளி நலமுடன் உள்ளாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.