இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழா -நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பக்தர்கள்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக சித்திரை, ஆடி, தை, பங்குனி உள்ளிட்ட மாதங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்வர். இதில் தை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெறும். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு வருவர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.
தென் மாவட்டங்களான தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். இந்தநிலையில் தை மாத கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு 16 வகை திவ்ய பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் பூஜைகளும் நடைபெற்றது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அம்மனை வேண்டி , அக்கினிச்சட்டி, மாவிளக்கு, பறக்கும்காவடி, தேர்இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகாதார மையங்கள், மற்றும் பாதுகாப்பு வசதிக்காக ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திருவிழா ஏற்பாடுகளை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, கோவில் செயல் அலுவலர் இளங்கோ மற்றும் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோயில் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.