173 பேருடன் சென்ற விமானத்தில் தீ! பயணிகள் பாதுகாப்பாக வெளியேறும் விடியோ!
மல்லை சத்யா குறித்து பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை: துரை வைகோ
கோவை: மல்லை சத்யா விவகாரத்தை நாங்கள் கடந்து விட்டோம், அவரைப் பற்றி பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் துரை வைகோ செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது, மதிமுக பொதுசெயலாளர் வைகோவின் நாடாளுமன்ற பதவி நேற்றுடன் நிறைவு பெற்றது எனவும், கலைஞர் கருணாநிதியால் நாடாளுமன்றத்திற்கு சென்ற வைகோ, 30 ஆண்டுகள் நாடளுமன்றத்தில் பணியாற்றியுள்ளார். நேரு, சாஸ்திரியை தவிர்த்து 12 பிரதமர்களுடன் நாடாமன்றத்தில் மக்கள் நலனுக்காக வாதம் செய்துள்ளார்.
ஒடுக்கப்பட்டவர்களின் குரல் வைகோ
ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருந்தவர் வைகோ, தொழிலாளர் நாளான மே 1 ஆம் நாளை நாடு முழுவதும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் பேசியவர் வைகோ, அதன் விளைவாகவே அடுத்த நாளே மே 1 அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. என்எல்சி தனியார் மயத்தை தடுத்தது, ரயில்வே டிடிஆர்களுக்கு படுக்கை வசதி கிடைக்க காரணமாக இருந்தது என பல சாதனைகளை செய்தவர் வைகோ எனவும் தெரிவித்தார்.
வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
நான்காவது முறையாக மாநிலங்களவை வைகோ செல்ல காரணமாக இருந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தலைமுறையினர் வைகோவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். யாராக இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பணிகளை செய்ய வேண்டும். கமலஹாசனுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அவருக்கு வாழ்த்துகள், தமிழக மக்களுக்கான உரிமைக்காகவும், மக்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்தும் அவர் பேசுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.
தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை
மல்லை சத்யா விவகாரத்தை நாங்கள் கடந்து விட்டோம், அவரைப் பற்றி பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை எனவும் திருச்சியில் மாநாடு நடத்துவதை பற்றி தான் நாங்கள் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம் எனவும் தெரிவித்தார். அவர் குறித்து பேசுவதே நேர கொலை என தெரிவித்த அவர், ஒவ்வொரு இயக்கத்திலும் ஒரு காலகட்டத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதும், வெளியில் செல்வதும் இருக்கும். இவரது குற்றச்சாட்டுக்கு உண்டான விளக்கத்தை ஏற்கெனவே நான் கூறியிருக்கிறேன், தலைவரும் கூறியிருக்கிறார், எங்கள் கட்சியின் நிர்வாகிகளும் பதில் கூறியிருக்கிறார்கள். எனவே தயவுசெய்து மல்லை சத்யாவை கடந்து செல்வோம் என தெரிவித்தார்.
பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். விமர்சனங்களுக்கு பதில்கள் கொடுத்து இருக்கிறோம் என தெரிவித்தவர், மக்களுக்கான விஷயங்களை பேசுவோம் எனவும் தெரிவித்தார்.
குழப்பம் ஏற்படுமா?
கூட்டணிக் கட்சிகளை திமுக விழுங்கி கொண்டு இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது குறித்த கேள்விக்கு, அவர் எதிர்க்கட்சித் தலைவர், சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது , அவருடைய வேலையை செய்கிறார், குழப்பம் ஏற்படுமா என பார்க்கின்றார் என்றவர் அது அதிமுக தலைவருடைய கருத்து என தெரிவித்தார்.
மாட்டி விட்டு விடாதீர்கள்
மல்லை சத்யாவிற்கு ஆதரவாக கட்சியில் இருந்து யாரும் செல்லவில்லை என தெரிவித்த அவர், திமுக கூட்டணியில் இன்னும் சீட் பங்கீடு குறித்து பேசவில்லை எனவும் தெரிவித்தார். இரட்டை இலக்க தொகுதிகளில் தான் நிற்க வேண்டும் என சொல்லியதாக சொல்கின்றார்களே என்ற கேள்விக்கு, நான் இதற்கு ஏற்கனவே தெளிவான பதில் சொல்லிவிட்டேன் , போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது மாட்டி விட்டு விடாதீர்கள் என துரை வைகோ கூறினார்.