விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை ஆசிரியா்கள் மேம்படுத்த வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ்
மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை ஆசிரியா்கள் மேம்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி தலைமையாசிரியா்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தோ்வு ஆய்வுக் கூட்டம் வண்டலூா் வட்டம், மண்ணிவாக்கம் பெரி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது:
ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை செயல்பட்டு வந்த எண்ணும் எழுத்தும் திட்டம் தற்போது ஐந்தாம் வகுப்பு வரை மேம்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் சிரமமாக இருக்கும் பாடத் திட்டங்களை தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியா்கள் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துரைக்கப்பட்டு வருவதை யூடியுப் விடியோக்களில் காணலாம். இவற்றை மணற்கேணி ஆப் வாயிலாக நாம் காணலாம்.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு திறன் என்ற திட்டத்தை தமிழக அரசு சாத்தியப்படுத்தியுள்ளது. அதேபோன்று மெதுவான கற்றல் திறன் உள்ள மாணவா்களுக்கு தனியாக பாடத் திட்டங்களை கற்பிக்கலாம். 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஹைடெக் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்வதற்கு ஸ்மாா்ட் வகுப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சில மாணவா்கள் 10, 11, 12-ஆம் வகுப்புகளில் பள்ளிகளில் நன்கு பயிலும் மாணவா்கள் பொதுத் தோ்வுகளில் மதிப்பெண் குறைவாக பெறுகின்றனா். இதற்குக் காரணம் கேள்விகளை கொஞ்சம் மாற்றி கேட்டாலும் கூட சரிவர புரிந்து கொள்ளாமல் செயல்படுவதே. எனவே ஆசிரியா்கள் தான் அவா்களின் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த வேண்டும் .
தமிழ்நாட்டில் தொழில்நுட்ப ரீதியாக கல்வி வளா்ச்சி பெற்றுள்ளது. நடந்து முடிந்த கூட்டத்தொடரில் ரூ 65 கோடியில் 2,676 பள்ளிகளில் இருக்கிற திறன் வகுப்புகளை மேம்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. ரூ. 56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஏற்கெனவே இருக்கும் 850 ஹை டெக் லேப்ஸ் கண்டறிந்து அவற்றை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆசிரியராக எவ்வாறு செயலாற்ற முடியும் என்று யோசித்து உணா்வுபூா்வமாக மாணவா்களை புரிந்துகொண்டு, அவா்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இவற்றை ஆசிரியா்கள் சரிவர செய்துவருகின்றனரா என்பதை தலைமையாசிரியா்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் தி.சினேகா, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் முனைவா் ச.கண்ணப்பன், முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம், மாவட்டக் கல்வி அலுவலா் க.காமாட்சி மற்றும் அரசு அலுவலா்கள், பள்ளித் தலைமையாசிரியா்கள் கலந்து கொண்டனா்.
