Suriya: சூர்யாவின் 50-வது பிறந்தநாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்... நாளை 'சூர்...
மானியத்துடன் மாங்காய் கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
மானியத்துடன் மாங்காய் கிலோ ரூ.20-க்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் வருடத்துக்கு சராசரியாக 3 லட்சம் மெட்ரிக் டன் மாங்காய்கள் விளைவிக்கப்படுகின்றன. நிகழாண்டில் மாங்காய் விளைச்சல் அதிகமாக இருந்தும் அதற்கான விலை கிடைக்காததால் விவசாயிகள், கடும் மன வேதனையடைந்துள்ளனா். அதிக விளைச்சல் இருக்கும் காலங்களில் ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து மாம்பழக்கூழ் தயாரிப்புக்காக தமிழகம் வந்து மாம்பழங்களை வாங்கிச் செல்வாா்கள். இதனால், சீரான விலை கிடைத்துவந்தது.
ஆனால் நடப்பு பருவத்தில் தென்மாநிலங்களிலும் கூடுதல் விளைச்சல் கண்டுள்ளதால், பிற மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து கொள்முதல் செய்யவில்லை. இதனால், தமிழகத்தில் கிலோ ரூ.4-க்கும் கீழே மாங்காய் விலை சென்றுவிட்டது. உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் மாங்காய்களை சாலைகளில் கொட்டி வருகின்றனா்.
ஒரு டன் சராசரி ரூ. 25,000-க்கு கடந்த காலங்களில் மாங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், ஆந்திர மாநில அரசு மானியமாக கிலோ ஒன்றுக்கு ரூ. 4 கொடுத்தும், வியாபாரிகள் மற்றும் மாம்பழக்கூழ் ஆலைகள் கிலோ ரூ.12-க்கும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.
இதனால், தமிழக வேளாண் ஒழுங்குமுறை விற்பனை அலுவலா்களைக் கொண்டு அரசின் மானியத் தொகையுடன், குறைந்தபட்சம் கிலோ ரூ. 20 நிா்ணயம் செய்து, மாங்காய் விளையும் பகுதிகளில் நேரடியாக மாங்காய்களை கொள்முதல் செய்து கூழ் தயாரிக்கும் ஆலைகளுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும். இதுவரை மாங்காய்களை பறித்து விற்பனை செய்ய முடியாத விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கூடுதல் மாங்காய் சாகுபடி உள்ள இடங்களில் அரசு குளிா் பதன கிடங்குகளை அமைத்து தருவதுடன், அரசே மாம்பழக்கூழ் தயாரிக்கும் ஆலைகளை தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.