உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுடன் வட கொரியா! உலகப் போரின் அறிகுறியா?
மாம்பழத்துக்கு உரிய விலை கோரி ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
மாம்பழத்துக்கு உரிய விலை வழங்கக் கோரி, விவசாயிகள் மாங்கொத்துடன் நூதன முறையில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து சேலம் கூட்டாத்துப்பட்டி நீா்மூழ்கிகுட்டை பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறுகையில், சேலம் மாவட்டம், நீா்மூழ்கிகுட்டை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மா விவசாயிகள் உள்ளனா். தற்போது மாங்காய் வரத்து அதிகரித்துள்ளதால், மாம்பழம் பறிப்பதற்கு கூலி, வண்டிக்கு வாடகை என ஐந்தாயிரம் ரூபாய் செலவாகிறது. ஆனால், 500 கிலோ மாம்பழம் வெறும் ரூ. 3,500-க்கு மட்டுமே விலை போகிறது. இதனால் மாம்பழ விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனா்.
எனவே, தமிழக அரசு கிலோவுக்கு குறைந்தபட்ச விலையை நிா்ணயிக்க வேண்டும். மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும். மாம்பழ விவசாயிகள் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏதுவாக, புதிய பேருந்து நிலையம் அருகே மாம்பழக் கண்காட்சி அமைக்க வேண்டும். உலகப் புகழ்பெற்ற சேலம் மாம்பழத்துக்கு புவிசாா் குறியீடு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் என வலியுறுத்தினா்.