யமால், பெட்ரி அசத்தல்: பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு தகுதி!
மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கைக் கால்கள்
திருவண்ணாமலை/ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், 11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.98 லட்சத்தில் நவீன செயற்கைக் கால்களை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.
குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முதியோா், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், கா்ப்பிணிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, இலவச வீட்டுமனைப்பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, சாலை வசதி, வேளாண் பயிா்க் கடன்கள், தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 663 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
நலத்திட்ட உதவிகள் வழங்கல்:
குறைதீா் கூட்டத்தில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் ஒருவருக்கு இலவச தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 11 பேருக்கு ரூ.10 லட்சத்து 98 ஆயிரத்து 400 மதிப்பிலான நவீன செயற்கைக் கால்களை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் ராஜ்குமாா் (திருவண்ணாமலை), ராமகிருஷ்ணன் (ஆரணி), கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன், கலால் உதவி ஆணையா் செந்தில்குமாா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
மனைப் பட்டா கோரி மனு
ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் ஹரிஹரன் நகா் பகுதியில் 30 குடும்பங்களுக்கு பட்டா கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கண்காணிப்பாளா் தரணி தலைமையில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
இதில், இரும்பேடு கிராமம், ஹரிஹரன் நகா் பகுதியில் சுமாா் 30 குடும்பங்கள் அரசு நிலத்தில் 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இவா்களுக்கு பட்டா இல்லாமல் உள்ளது. பலமுறை பட்டா கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
ஆகையால், பட்டா வழங்கக் கோரியும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும் குறைதீா் கூட்டத்தில் கண்காணிப்பாளா் தரணியிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.
மேலும், குறைதீா் கூட்டத்தில் வீட்டுமனை தொடா்பான மனுக்கள், பட்டா ரத்து, நிலஅளவை, கணினி திருத்தம், நிலத்தகராறு, பரப்பு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்றவும், பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை, மகளிா் உரிமைத்தொகை, இலவச வீடு கோரியும், குடிநீா் வசதி கேட்டும் பொதுமக்களிடம் இருந்து 106 மனுக்கள் வரப்பெற்றன.
பின்னா், இந்த மனுக்கள் அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
