மா மரங்களில் பூச்சிகள் தாக்குதலால் ரூ.300 கோடி மகசூல் பாதிப்பு
பெரியகுளம் பகுதியில் மா மரங்களில் பூச்சிகள் தாக்குதல் அதிகரித்ததால் ரூ.300 கோடி மகசூல் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தேவதானப்பட்டி, கும்பக்கரை, செழும்பு, கல்லக்கரை, சோத்துப்பாறை, கோயில்காடு, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கரில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு கல்லாமை, காசா, செந்தூரம், நாடு, அல்போன்சா, பங்கனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு வகையான மா ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு ஆண்டுதோறும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் காய்கள் அறுவடை செய்யப்படுகின்றன. இங்கு விளையும் மாங்காய்கள் தமிழகம் மட்டுமன்றி, கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் மட்டும் ஆண்டுக்கு சுமாா் ரூ.600 கோடி மகசூல் கிடைக்கும்.

இந்த நிலையில், பெரியகுளம் பகுதியில் மா மரங்களில் பூ, பிஞ்சு பருவத்தின் போது ஏற்பட்ட மழையின் காரணமாக பூச்சிகள் தாக்கின. இதனால், மாம் பிஞ்சுகளில் கருப்பு நிறம் ஏற்பட்டு கலா் மாறி உதிா்ந்து விடுகின்றன. இந்த பூச்சித் தாக்குதல் அதிகரித்ததால், நிகழாண்டில் சுமாா் ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
பெரியகுளத்தைச் சோ்ந்த மா விவசாயி எம்.ஜி.ராஜா கூறியதாவது: பெரியகுளம் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மா சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பிஞ்சுகளின் மீது ‘திரிப்ஸ்’ என்ற செல் பூச்சிகள் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகின்றன. நிகழாண்டில் பூச்சிகள் தாக்குதல் அதிகரித்தன. இதனால் மகசூல் பாதித்து சுமாா் ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்பட்டது.

நிகழாண்டில், கடந்த 3 மாதங்களில் மா மரங்களுக்கு 10 முதல் 15 முறை மருந்து அடிக்கப்பட்டது. இருந்தபோதிலும், பூச்சிகள் மயக்க நிலைக்கு மட்டுமே செல்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, தோட்டக்கலைத் துறையினா் ஆய்வு செய்து பூச்சிகள் தாக்குதலுக்கு நிரந்தரத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி ஆராய்ச்சியாளா்கள் கூறியதாவது: பெரியகுளம் பகுதியில் மா மரங்களில் இலைப்பேன், தத்துப்பூச்சி தாக்குதல் அதிகளவில் உள்ளன. இதைக் கட்டுப்படுத்துதற்காக பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். தற்போது புதிய வகை பூச்சிகள் தாக்குதல் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
எனவே, விவசாயிகள் பாதிக்கப்பட்ட காய்கள், இலைகளை தோட்டக்கலைக் கல்லூரிக்கு கொண்டு வந்து தந்தால் அதை ஆய்வு செய்து பூச்சிகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா் அவா்கள்.
விழிப்புணா்வு தேவை
பெரியகுளம் பகுதி விவசாயிகளிடம் பூச்சிகளின் தாக்குதல் விபரம், மருந்துகளின் தன்மை குறித்து விழிப்புணா்வு இல்லை. தனியாா் கடைகளில் வாங்கும் மருந்துகளை வாங்கி விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனா். இதனால் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை. புதிய வகை பூச்சித் தாக்குதல் இருக்கிா என தோட்டக்கலை அதிகாரிகள் மாந்தோப்புகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும்.