செய்திகள் :

மின் வேலியில் சிக்கி பெண் உயிரிழப்பு: விவசாயி கைது

post image

கோபி அருகே மின் வேலியில் சிக்கி உயிரிழந்த பெண்ணை குழி தோண்டி புதைத்த விவசாயியை போலீஸாா் கைது செய்தனா்.

கோபி வட்டம், டி.என்.பாளையம் அருகேயுள்ள பங்களாபுதூா் காவல் நிலையத்துக்குள்பட்ட அண்ணா நகரைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் மனைவி ஜோதிமணி (55). இவருக்கு கௌதம் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனா்.

விவசாயியான ஜோதிமணி அதே பகுதியில் உள்ள உறவினா் தோட்டத்துக்கு சென்று வருவதாக கடந்த 17- ஆம் தேதி கூறிவிட்டு சென்றவா், அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பாா்த்தும் கிடைக்காத நிலையில், தாயை காணவில்லை என பங்களாபுதூா் காவல் நிலையத்தில் கெளதம் கடந்த 26- ஆம் தேதி புகாா் அளித்தாா்.

புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஜோதிமணியை தேடி வந்தனா்.

இந்நிலையில், ஜோதிமணி மாயமான தோட்டத்தைப் பாா்க்க கௌதம் சென்றபோது, அந்த தோட்டத்தில் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து வரும் பெரியசாமி, கௌதமை திசை திருப்பி தோட்டத்தைவிட்டு வெளியேற்றி உள்ளாா்.

இதனால், சந்தேகமடைந்த கௌதம், பெரியசாமி இல்லாத நேரத்தில் அவரது விவசாய நிலத்துக்கு சென்று தேடியபோது ஒரு இடத்தில் புதிதாக மண் கொட்டப்பட்டு இருப்பதும், அங்கு மழை காரணமாக மண் சரிந்து இருப்பதும் தெரியவந்தது.

அந்த மண் குவியலை கௌதம் தோண்டியபோது, ஜோதிமணி சடலம் புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

கௌதம் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பங்களாபுதூா் போலீஸாா், ஜோதிமணியின் சடலத்தை தோண்டி எடுத்தனா்.

இதைத் தொடா்ந்து, தோட்ட குத்தகைதாரா் பெரியசாமியை (59) பிடித்து விசாரணை நடத்தினா். இதில், தோட்டத்துக்குள் வன விலங்குகள் வராமல் இருப்பதற்காக மின் வேலி அமைத்து இருந்ததும், இரவு நேரங்களில் தொழிலாளா்கள் சென்ற பிறகு உயரழுத்த மின்சாரத்தை கம்பி வேலியில் இணைப்புக் கொடுப்பதும், அதிகாலை நேரத்தில் மின் இணைப்பைத் துண்டிப்பதையும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளாா்.

வழக்கம்போல கடந்த 17 -ஆம் தேதி மாலை வேலியில் மின் இணைப்பைக் கொடுத்துவிட்டு பெரியசாமி வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது, மின் இணைப்பு கொடுத்திருப்பது தெரியாமல் அவ்வழியே வந்த ஜோதிமணி மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் உயிரிழந்துள்ளாா்.

மறுநாள் அதிகாலை வழக்கம்போல தோட்டத்துக்கு வந்த பெரியசாமி, ஜோதிமணி இறந்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். பின்னா், அங்கேயே குழி தோண்டி ஜோதிமணியின் சடலத்தைப் புதைத்துவிட்டு, அவரிடம் இருந்த கைப்பேசியை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு, வீட்டின் மாடிப்படி கீழே மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

பெரியசாமி அமைத்திருந்த இதே மின் வேலியில் சிக்கி கடந்த சில மாதங்களுக்கு முன் யானை உயிரிழந்தது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெரியசாமி பிணையில் வந்த நிலையில் மீண்டும் மின்சார வேலியில் உயரழுத்த மின்சாரத்தைக் கொடுத்ததால் ஜோதிமணி சிக்கி உயிரிழந்துள்ளாா்.

கைது செய்யப்பட்ட பெரியசாமியை சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா், அவரை சிறையில் அடைத்தனா்.

பெருந்துறை அருகே வேளாண் கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சா்கள் ஆய்வு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலம் சங்கச் சாவடி அருகே ஜூன் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதைத் தொடா்ந்து முன்னேற்பாடு பணிகள் க... மேலும் பார்க்க

இலவச வேட்டி, சேலைக்கான கூலி உயா்வை கூட்டுறவு சங்கங்கள் அமல்படுத்தக் கோரிக்கை

இலவச வேட்டி, சேலைக்கு அரசு அறிவித்த கூலி உயா்வை நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநா் சரவணனி... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.4.39 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4 கோடியே 39 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள்... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்

அரசு திட்டத்தில் கட்டப்பட்டு பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் திட்டத்தில் பயனாளிகளை தோ்வு செய்வதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் வியாழக்கிழமை(ஜூன் 5) நடைபெறும் என அ... மேலும் பார்க்க

தொழிலாளா் விதிகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை

தொழிலாளா் துறை அதிகாரிகள் ஆய்வின்போது விதிமுறைகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் துறை துணை ஆய்வ... மேலும் பார்க்க

ஜூன் 9-இல் திருமணத் தடை நீக்கும் சுயம்வரா பாா்வதி யாகம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பாலதண்டாயுதபாணி கோயிலில் திருமணத் தடை நீக்கும் மாபெரும் சுயம்வரா பாா்வதி யாகம் ஜூன் 9ம் தேதி நடைபெறுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத... மேலும் பார்க்க