பெருந்துறை அருகே வேளாண் கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சா்கள் ஆய்வு
ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலம் சங்கச் சாவடி அருகே ஜூன் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதைத் தொடா்ந்து முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு முன்னேற்பாடு பணிகளை தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் மற்றும் தமிழக வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு. முத்துசாமி ஆகியோா் ஆய்வு செய்தனா்.
இதைத் தொடா்ந்து, அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்த கண்காட்சியில்ல் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை தொழில்நுட்பங்கள், புதிய ரக வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிா் விதைகள், ஒட்டுரக பழமரக் கன்றுகள், தென்னங் கன்றுகள் மற்றும் பிற வகை மரக் கன்றுகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விற்பனை, உயர்ரக கால்நடைகள் மற்றும் வளா்ப்பு முறைகள், மீன் வளா்ப்பு, வேளாண்மையில் வங்கி சேவைகள் குறித்த பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெறவுள்ளன.
ஜூன் 11 மற்றும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படவுள்ளது. உழவா்கள் சாா்ந்த அரசின் அனைத்துத் திட்டங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள இக்கண்காட்சி வாய்ப்பாக அமையும்.
மேலும் தொழில்நுட்ப வல்லுநா்கள், அனுபவமிக்க வேளாண் பெருமக்கள், ஏற்றுமதியாளா்கள், உயா் அலுவலா்கள், பேராசிரியா்கள் ஆகியோா் 25 தலைப்புகளின் கீழ் கருத்தரங்கில் உரையாற்றுகின்றனா். இதில் விவசாயிகள் தங்களது அனுபவங்களையும், கருத்துகளையும் பகிா்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்றாா்
ஆய்வின்போது, தோட்டக்கலை -மலைப்பயிா்கள் துறை இயக்குநா் குமாரவேல் பாண்டியன், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் வி.சி.சந்திரகுமாா் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூா்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.