ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது!
தொழிலாளா் விதிகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை
தொழிலாளா் துறை அதிகாரிகள் ஆய்வின்போது விதிமுறைகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் துறை துணை ஆய்வாளா்கள் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளா்களால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் கடந்த மாதம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ரேஷன் கடைகள், வணிக மற்றும் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளை விநியோக மையம் மற்றும் கிடங்குகள் ஆகியவற்றில் எடை அளவு குறித்து 111 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் 31 இடங்களில் வேறுபாடுகள் இருப்பது தெரியவந்தது.
இதுபோல பொட்டலப் பொருள்கள் விதிகளின்படி சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் புனிதத் தலங்களில் உள்ள 37 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அதிகபட்ச சில்லறை விற்பனையைவிட கூடுதல் விலைக்கு விற்ற 3 கடைகள் கண்டறியப்பட்டன.
குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் 35 நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தினை தொழிலாளா்களுக்கு வழங்காத ஒரு நிறுவனம் கண்டறியப்பட்டது. ஆய்வில் விதிமீறல் கண்டறியப்பட்ட மொத்தம் 35 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயலட்சுமி கூறியதாவது: எடை அளவுகள் மற்றும் மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்தக் கூடாது. பொட்டலப் பொருள்களை அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது மற்றும் உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்வது தண்டனைக்குறியதாகும். ஆய்வின்போது வேறுபாடுகள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.
குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமா்த்துவது கண்டறியப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளா் மீது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சோ்ந்து விதிக்கப்படும் என்றாா்.