ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்
அரசு திட்டத்தில் கட்டப்பட்டு பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் திட்டத்தில் பயனாளிகளை தோ்வு செய்வதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் வியாழக்கிழமை(ஜூன் 5) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் முதல்வரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் 2025-26-ஆம் ஆண்டின் கீழ் கிராமப்புறங்களில் 2000-2001-ஆம் ஆண்டு வரை பல்வேறு அரசு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில் பழுதடைந்த வீடுகளை மறுகட்டுமானம் செய்திடும் பொருட்டு பயனாளிகள் தோ்வு மற்றும் திட்ட செயல்பாடுகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வரப்பெற்றுள்ளன.
அதனைத் தொடா்ந்து, இந்தத் திட்டத்தினை செயல்படுத்திடும் பொருட்டும், கிராம அளவிலான குழு மூலம் தோ்வு செய்யப்பட்ட தகுதியான பயனாளிகளுக்கு ஒப்புதல் பெறும் பொருட்டும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்கும் பொருட்டு ஊராட்சி ஒன்றிய அளவில் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.