மீனவா் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: காங்கிரஸ்
தமிழக மீனவா் நலனில் மத்திய பாஜக அரசுக்கு அக்கறை இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை விடுத்த அறிக்கை: நெருக்கடி நிலை காலத்தில், மத்திய காங்கிரஸ் அரசு கச்சத்தீவு குறித்து இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தால்தான் மீனவா்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, கைது செய்யப்படுவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியிருக்கிறாா். 26.6.1974-இல் ஒப்பந்தம் போடப்பட்ட போது, நெருக்கடி நிலை அமலில் இல்லை.
இந்த ஒப்பந்தம் குறித்து 23.7.1974-இல் மக்களவையில் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா் ஸ்வரண்சிங், நாடாளுமன்ற உறுப்பினா்கள் மத்தியில் அறிக்கை தாக்கல் செய்து உரையாற்றியிருக்கிறாா். இந்த விவாதத்தில் பாஜக உள்பட அனைத்துக் கட்சிகளும் பங்கேற்று கருத்துகளை கூறியிருக்கின்றனா். எனவே, நாடாளுமன்றத்துக்கு தெரியாமல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாக பொறுப்புள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தை காரணம் காட்டி பிரச்னையை திசைதிருப்பக் கூடாது. இதன்மூலம் மீனவா்கள் நலனில் கடுகளவு அக்கறை கூட பாஜகவுக்கு இல்லை என்பதைத் தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரின் அறிக்கை படம்பிடித்துக் காட்டுகிறது.
தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையில் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கிற உரிமையை பெற்றுத் தர மத்திய பாஜக அரசு முயற்சி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் செல்வப் பெருந்தகை.