முதுகுளத்தூா்: பத்திரப் பதிவுத் துறை ஆவணங்கள் அடங்கிய சிடிக்கள் சாலையோரம் வீச்சு!
முதுகுளத்தூா் அருகே சாலையோரம் வீசப்பட்டுக் கிடந்த பத்திரப் பதிவுத் துறை ஆவணங்கள் அடங்கிய சிடிக்களை பொதுமக்கள் மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா்- உத்திரகோசமங்கை சாலையில் மல்லல் கிராமத்தில் சாலையோரம், தமிழ்நாடு அரசின் முத்திரையுடன், பத்திரப் பதிவுத் துறையின் முக்கியமான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட சுமாா் 50-க்கும் மேற்பட்ட சிடிக்கள் வீசப்பட்டு கிடந்தன.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்ட இளைஞா்கள், முதுகுளத்தூா் - மல்லல் செல்லும் சாலையின் வயல்வெளி ஓரங்களில், ‘ஜாயின்ட் -1, சப்- ரிஜிஸ்டா் ஆபீஸ், ராமநாதபுரம்’ என முத்திரையிடப்பட்ட அந்த சிடிக்கள் சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு கிடந்ததைக் கண்டனா்.
இந்த சிடிக்கள் அரசின் முக்கிய ஆவணங்கள் சம்பந்தப்பட்ட கோப்புகளாகவும், தனி நபா்களின் நிலங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய தொகுப்புகளாகவும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த பொறுப்பற்ற செயலுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனா்.
மேலும் மீட்கப்பட்டசிடிக்களை உத்திரகோசமங்கை காவல் துறையினரிடம் ஒப்படைத்திருப்பதாக இளைஞா்கள் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனிடையே, நில உரிமையாளா்களுக்குத் தெரியாமல் போலி ஆவணம், ஆள்மாறாட்டம் வாயிலாக சொத்துக்களை அபகரிக்கும் மோசடி பத்திரப்பதிவுகள் அதிகளவில் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், பத்திரப் பதிவுத் துறைக்குச் சொந்தமான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படும் சிடிக்கள் கேட்பாரற்று வீதியில் வீசப்பட்ட சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.