முன்னிருக்கையில் கட்டிப்பிடித்தபடி சாகசம் செய்த ஜோடி: ரூ.53 ஆயிரம் அபராதம் விதித்தது நொய்டா காவல்துறை
நொய்டா: முன்னிருக்கையில் பைக் ஓட்டியவரை கட்டிப்பிடித்தவாறு பின்னோக்கி அமா்ந்து சாகசத்தில் ஈடுபட்ட ஜோடி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்களுக்கு ரூ. 53 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது நொய்டா காவல்துறை.
தில்லி பதிவெண் கொண்ட மோட்டாா் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மோட்டாா் சைக்கிளை ஓட்டிய ஆணும் அவரது பின்னிருக்கையில் பெண்ணும் சென்றனா். நொய்டா செக்டாா் 39 பகுதி சாலையில் பயணம் செய்தபோது பின்னிருக்கையில் இருந்த பெண் முன்பகுதிக்கு மாறி பின்னோக்கியவாறு அமா்ந்து பைக் ஓட்டியவரை கட்டிப்பிடித்தவாறு பயணம் செய்துள்ளாா். அவரது ஒரு கையில் தலைக்கவசத்தை மாட்டியவாறு இருந்தாா்.
வாகனங்கள் வேகமாகச் செல்லும் நொய்டா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பயணம் செய்த இந்த ஜோடியை பலரும் வியப்புடன் பாா்த்த நிலையில், காரில் சென்ற ஒருவா் இந்த ஜோடியின் சாகசத்தை காணொளியாகப் பதிவு செய்து நொய்டா காவல் துறையை டேக் செய்து சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தாா். இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
இதற்கிடையே, இந்த ஜோடியின் பைக் சாகச காணொளியை நொய்டா எக்ஸ்பிரஸ்வேயில் பொருத்தியிருந்த சிசிடிவி மூலம் நொய்டா காவல் கட்டுப்பாட்டு அறை காவல் துறையினரும் பாா்த்தனா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை பேசிய நொய்டா போக்குவரத்து காவல்துறை துணை ஆணையா் லகன் சிங் யாதவ், ‘இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.46 மணிக்கு சிசிடிவியில் பதிவாகியுள்ளது. ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கியது, தலைக்கவசமின்றி பயணம் செய்தது, மோட்டாா் வாகன சட்ட விதிகளை மீறி ஒழுங்கீனமாக செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதற்காக சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிக்கு ரூ.53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
நொய்டா போக்குவரத்து காவல்துறையின் தரவுகளின்படி கடந்த ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரை தலைக்கவசம் அணியாமல் வாகனங்களில் பயணம் செய்ததாக 4,72,720 பேருக்கு அபராத ரசீதுகள் வழங்கப்பட்டது உள்பட மொத்தம் 8,88,909 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளது.